அதுவொருகாலம்! யாழ்ப்பாணம்


(4 வருடங்களுக்கு முன்னான பதிவொன்றின் மீளிடுகை)
அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”

பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.

“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.

“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை.” எண்டு அவ சொன்னா.

எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு.

மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது.

“அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?”

யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா எண்டு அம்மா அனுப்ப, போய்ப்பார்த்த ஒரு ஜீவனிடமிருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

மனுசி என்ன கேட்குது என்று எனக்கு விளங்கிட்டுது. இண்டைக்கு காட் கிடைக்கிறது எண்டது யாழ்ப்பாணத்து சமூகத்தின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போல எனக்குப் பட்டது.

இன்னொரு பக்கத்தாலை மனுசி ஆருக்கும் என்னை கலியாணம் பேசப்போதோ என்று கூட ஒரு வெட்கம் கலந்த யோசினை எனக்கு வந்து போனது.

மகளுக்கு வெளிநாடுகளில ஆரும் காட் கிடைச்ச பெடியனா பாக்க முடியுமோ? சாதியைப் பற்றி பிரச்சனையில்லை. ஆனா காட் கிடைச்சிருக்க வேணும் எண்ட மாதிரியான கதையள் அங்கை வலு பிரபலம்.

எனக்கென்னவோ சாதி முறையெல்லாம் ஒழிஞ்சு புதுசா காட் கிடைச்ச சாதி, காட் கிடைக்காத சாதி என்று வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.

“என்ன காட் ஆச்சி” எண்டு நான் அவவை கேட்டன்.

“அதுதானப்பு! அங்கை இருக்கிற காட். அது கிடைச்சால்த்தானம் ஆரையேனும் கூப்பிடலாம். என்ரை மூத்த ரண்டுக்கும் கிடைச்சிட்டுது. கடைசிதான் பாவம். இன்னும் கிடைக்காமல் கஸ்ரப்படுறான்.”

மனுசி உண்மையிலேயே கவலைப்பட்டுது.

“ஓமணை. இப்ப கொஞ்சம் கஸ்ரம் தான்.” எண்டு சொல்லி நான் அவவை ஆறுதல்ப்படுத்த முயற்சித்தன்.

எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஏனென்றால் எல்லாம் உந்த சமாதானத்தாலை தான் எண்டு மனுசி சொல்லவில்லை.

ஆனா எனக்கு இன்னொருவர் அப்பிடிச்சொன்னார். அவரும் வெளிநாடு தான். ஐரோப்பா நாடுகளில இப்ப கோடைகாலம் எண்ட படியாலை நிறையப் பேர் விடுமுறையில தமிழீழத்துக்கு வந்திருக்கினம். விடுமுறை முடிய தங்கடை இடங்களுக்கு போறதுக்கு முதல் தங்கடை பிள்ளையளுக்கு தமிழீழத்தின் அருமை பெருமைகளை அவை சொல்லிக்கொண்டிருக்கினம்.

அதுகள் தங்களுக்குள்ளை டொச்சிலையும் பிரெஞ்சிலையும் இங்கிலிசிலையும் கதைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஒரு மல்ரி கல்ச்சர் சிற்றியாக்கி, மாட்டு வண்டிலயும், ஆட்டுக்குட்டியையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஒரு காலத்திலை நான் ரெயினைப் பார்த்த மாதிரி.

இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? நல்ல வேளை நாங்கள் நேரத்தோடை லண்டன் போனது.

நான் அந்த பிற்காலத்தில எங்கட நாட்டுக்கு வந்து வேலை செய்யப்போற பெடியை பார்த்தன். கொசுக்கடியில முகம் எல்லாம் வீங்கி, தடிமனாலை குரல் எல்லாம் அடைச்சு, பெடியை பாக்கவே பாவமா இருந்தது. அவனுக்கு வெயில் ஒத்துக்கொள்ள வில்லையாம் எண்டு அவன்ரை அம்மா சொன்னா.

தனக்கு தமிழீழம் எண்டொரு நாடு சிறீலங்காவில இருக்கு எண்டு அறிவூட்டப்படுகிற ஒரு குழந்தையின் அப்பா தான் அந்த கேள்வியை என்னை கேட்டார்.

“ஏன்.. அசைலம் அடிக்கேல்லையோ.. ஒஸ்ரேலியாவில கஸ்ரமோ?”

தெரியாதெண்டு சொன்னன்.

“விசாரிச்சு பாக்கவில்லையோ?” எண்டு கேட்டார்.

“எனக்கு இப்ப என்ன அவசரம்? வேலை செய்யிறன். படிக்கிறன். அசைலம் பற்றி யோசிக்கவில்லை.” என்று சொன்னன்.

“ஓ.. முந்தி சண்டை நடக்கும் போதாவது அசைலம் அடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லலாம். இப்ப ஒண்டும் இல்லைத்தானே…” எண்டு அவர் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பத்திக்கொண்டு வந்திச்சு. என்ன செய்ய வயசுக்கு மூத்த ஆக்களை எடுத்தெறிந்து பேசி எனக்கு பழக்கம் இல்லையெண்ட படியாலை பேசாமல் இருந்தன்.

யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டாயிற்று. பஸ்ஸில் தான் வந்தேன். பயணங்களின் போது அது விமானப்பயணமாயினும் எதுவாயினும் எனக்கருகிலிருப்பவர் யாராயிருக்கும் என எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்து போவதும் தான் எனக்கு அமைந்த வாழ்க்கை. ஆனால் அன்று வழமை மாறியிருந்திச்சு.

அவளுக்கு என்னை விட வயசு குறைவு. லண்டனில் படித்துக்கொண்டிருக்கிற அவளும் விடுமுறையில் வந்து திரும்பினாள். எனக்கு பக்கத்த சீற். தனியத் தான் வந்தாள். லண்டனில் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்கிறாளாம். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.

லண்டன் பற்றி நிறைய சொன்னாள். லண்டனில் தமிழ் இளைஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி சொன்னாள். அகதி அந்தஷ்த்துக்கள் ஏற்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் வேதனைக்குள்ளும் ஆகிறார்கள் என்றாள். ஒரு அறையை சில நேரங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றாள். சரியான அனுமதியில்லாததால் அடிமாட்டு விலைச் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றாள். மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நான்கு பவுண்ஸ் தான் சில சமயங்களில் கொடுக்கிறார்களாம். எவ்வளவு தான் கஷ்ரப்பட்டாலும் வீட்டிலிருந்து பெற்றோர் கதைக்கும் போது அதையெல்லாம் மறைத்து சந்தோசமாக பேசிச் சிரித்து மகிழ்விக்கிறார்கள் என்றாள்.

லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்.

நாங்கள் பேசிச் சிரித்து வருவதை எமக்கு அருகிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் பார்த்துக் கொண்டே வந்தார். முறிகண்டி தாண்டியதும் தான் கேட்டார்.

“வீட்டை வந்து போறியள் போல” அவளைப்பார்த்து தான் கேட்டா.

“ஓம். லீவில வந்து போறன்.”

“எந்த நாடு?”

“லண்டனுங்கோ..”

அவ தன்ரை மகள் ஜேர்மனியில எண்டா. மகள் இப்ப புருசனோடையும் பிள்ளையளோடையும் கொழும்பில வந்து நிக்கிறதாகவும் தமிழ்ச்செல்வன் ரண்டு கிழமை காலக்கெடு விதிச்சிருக்கிற படியாலை என்னவும் நடக்கலாம் எண்டு கொழும்பில நிக்கிறதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில நுவெரெலியா கண்டிப்பக்கம் போகலாம் எண்டு தன்னையும் கூப்பிட்டவையாம். ரண்டு கிழமை முடிய யாழ்ப்பாணம் வாறதைப்பற்றி யோசிப்பம் எண்டவையாம்.

“தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்” எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.

“இல்லைங்கோ.. நான் லண்டனில்லை. நான் கொழும்பு” எண்டன்.

மனுசி கொஞ்சம் குழம்பிப் போன மாதிரி இருந்திச்சு. மனுசி எங்களை என்னெண்டு நினைச்சுப் பார்த்திருக்கும் எண்டதை நான் நினைச்சுப் பார்த்தன். கொஞ்சம் சங்கடமாவும் கொஞ்சம் வெக்கமாகவும் இருந்திச்சு.

நான் மனிசியைப் பாத்தன். அவ இப்ப கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்திச்சு.

ஓ.. அப்ப இனி இவ உம்மை கூப்பிட வேணுமென்ன? மனுசி திடீரென்று கேட்டுது.

எனக்கு இதுக்கும் மேலையும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்திச்சு. வலு விபரமா அவவுக்கு நான் எடுத்துச் சொன்னன்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன். எண்டாலும் இப்ப உப்பிடி நடக்குது தானே.. எண்டு மனுசி சமாதானம் சொன்னா

பிறகு மனுசி லண்டன் நிலவரங்கள் பற்றி அறியத்தொடங்கினா.

கனநேரத்துக்கு பிறகு நான் எதிர்பார்த்த அந்த கேள்வியை அவ கேட்டா.

“அப்ப உமக்கு லண்டனில காட் கிடைச்சிட்டுதோ?”

பிற்குறிப்பு: ஓமந்தை சோதனை சாவடியில் இறங்கி ஏறிய போது அவ லண்டன் பெண்ணைப் பார்த்து கேட்டாவாம். உமக்கு அந்த பெடியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தா சொல்லும். சீற்றை மாத்துவம்.

எனக்கு அது தான் பிடிச்சிருந்தது. யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை தன் மகளாக நினைத்து அக்கறையோடை கேட்டா பாருங்கோ அங்கை தான் அவ ஒரு தமிழ் பொம்பிளையா நிக்கிறா. என்ன! அவவை மாதிரியான ஆக்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில இருக்கினம்.

தொடர்ந்தும் சொல்லுவன்

This entry was posted on Sunday, June 14th, 2009 and is filed under நினைவுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 Responses to “அதுவொருகாலம்! யாழ்ப்பாணம்”

  1. வசந்தன்(Vasanthan) on July 23rd, 2005 at 11:28 am

    ஓய்!
    அந்த மாதிரியிருக்கு.
    யாழ்ப்பாணம் போய் வாற எவருக்கும் கதைக்கிறதுக்கு ஏராளமான விடுப்புக்களும் விண்ணாணங்களும் இருக்கும்.
    எழுத்து நடை நல்லாயிருக்கு.
    தொடர்ந்து சொல்லும். பஸ் பயண அனுபவம் அருமை.
    ஆனா சந்தடி சாக்கில
    //ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன்.//
    உம்மைச் சின்ன பிள்ளை ஆக்கீட்டீரே.

  2. Seelan on July 23rd, 2005 at 12:00 pm

    ஒரு சிறுகதை மாதிரி எழுதியிருக்கிறீர்

  3. தமிழினி on July 23rd, 2005 at 1:12 pm

    சயந்தன் அப்ப அவங்க (அந்த வயசு குறைஞ்ச பெண்) சீற் மாத்தவில்லை அப்படியா? ம் அப்புறம் கதை கேக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். :)

  4. -/பெயரிலி. on July 23rd, 2005 at 4:36 pm

    sayanthan, nalla pathivu

  5. கரிகாலன்-karikaalan on July 23rd, 2005 at 7:14 pm

    ஆகா.மேலும் கேட்க ஆவலாய்
    இருக்கிறன்.தொடருங்கள்.

  6. Thangamani on July 24th, 2005 at 12:52 am

    நல்ல சுவரஸ்யமான பதிவு!

  7. Anonymous on July 24th, 2005 at 8:23 am

    என்ன வெளிநாட்டு மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களை இலேசாக நக்கல் அடிப்பது மாதிரி தெரியுது. என்ன துரோகி ஆக விருப்பமா? வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மக்களை இப்படி குறை கூறக்கூடாது.

  8. லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி on July 24th, 2005 at 8:51 am

    //இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? //

    அந்தப் பிற்காலம் எங்கை வரப் போகுது? அப்பிடியே வந்தாலும் எங்கட பெடியள் அங்கையே பிறந்து வளந்ததுகள்… இங்க என்னன்டு வந்து வாழுறது? வேணுமென்டா லீவுக்கு வந்திட்டு போகலாம் என்டு சொல்றவங்களுக்கிடையில அந்தப் பிற்காலம் தன்ர பிள்ளையின்ட காலத்தில வந்திடும் என்ட நம்பிக்கையும் பிற்காலத்தில இங்க வந்து வேலை செய்யலாம் என்ட நினைப்பும் இருக்குதே அவவுக்குள்ள…… பரவாயில்லை

    //”தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்” எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.//
    சயந்தன் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கோ… அவுஸ்திரேயியாவில இருந்து வந்ததென்டு நினைக்கல எண்டாலும் லண்டனால வந்ததோ எண்டு ஒருத்தர் கேட்டிட்டாங்களே. :-)

  9. மதி கந்தசாமி (Mathy) on July 24th, 2005 at 11:14 am

    good post Sayanthan.

    -Mathy

  10. Anonymous on July 24th, 2005 at 1:46 pm

    எழுதிக்கொள்வது: Virgee

    Sare unkal kathkal eallam nalaka iurkuthu. Sayanthan nekal srilanka poy vanththu pate sola innum iurkum entru nenakuran. Ealuthukal padepathuku avalaka irukuran.

    13.43 24.7.2005

  11. Thadcha on July 24th, 2005 at 5:44 pm

    //அவுஸ்திரேயியாவில இருந்து வந்ததென்டு நினைக்கல எண்டாலும் லண்டனால வந்ததோ எண்டு ஒருத்தர் கேட்டிட்டாங்களே//

    அட! ஆமால்ல!

  12. Shiyam Sunthar on July 25th, 2005 at 12:57 am

    தொடருங்கள்!

  13. Anonymous on July 25th, 2005 at 2:21 am

    எழுதிக்கொள்வது: ரம்யா நாகேஸ்வரன்

    undefined

    8.8 25.7.2005

  14. Anonymous on July 25th, 2005 at 2:22 am

    எழுதிக்கொள்வது: ரம்யா நாகேஸ்வரன்

    உங்கள் அனுபவத்தை படித்தது சுவாரஸ்யமாக இருந்தது.

    ரம்யா நாகேஸ்வரன்

    8.8 25.7.2005

    8.17 25.7.2005

  15. 'மழை' ஷ்ரேயா(Shreya) on July 25th, 2005 at 3:56 am

    என்னதான் ஒரு பெடியனையும் பெட்டையையும் ஒன்றாப்பாத்தோண்ண வழமையா எங்கடையாக்களுக்கு வாற சந்தேகம் வந்தாலும் அவ இப்பிடி (நல்லமாதிரி நினைச்சுச்) சொல்லி ஒரு நல்ல உரையாடல கெடுக்கக்கப்பாத்திருக்கக்கூடாது. :o \

    நல்லா எழுதியிருக்கிறீங்க.

  16. Anonymous on August 14th, 2005 at 6:12 pm

    எழுதிக்கொள்வது: pooya

    யொஉர் ச்டொர்ய் இச் வெர்ய் நிcஎ. இ லிகெ வெர்ய் முச் அல்ல் தெ பெச்ட் .

    18.12 14.8.2005

  17. லக்கிலுக் on June 16th, 2009 at 1:36 pm

    சுவாரஸ்யமாக இருந்தது சயந்தன்

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231