நான் படம் பார்த்த கதை


சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும்.

அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா நடிக்க வந்தவை எண்டது சுத்தமாத் தெரியாது. சொன்னால் நம்ப மாட்டியள். 97 இல வன்னிலை பூவே உனக்காக பாத்த போது தான் உவர் தான் விஜய் எண்டதையும் அவற்றை முகத்தையும் முதலில பாத்தன். அதுவும் அந்தப் படத்தில Don’t miss எண்டொரு பாட்டுக்கு ஆடுறது அரவிந்த சாமி எண்டு சொன்னாங்கள். (அது விஜய் தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்) நான் அதையும் நம்பிக் கொண்டு திரிஞ்சன்

தியேட்டருக்கு போற பழக்கமெல்லாம் 90 ம் ஆண்டே முடிஞ்சு போட்டுது. யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில கடைசியா ராஜா சின்ன ரோஜா எண்ட படம் பாத்த பிறகு நான் 7 வருசமா தியேட்டர்களுக்கு போனதில்லை. (பிறகு 97 இல திருச்சியில சோனா மீனா எண்டொரு தியேட்டருக்கு போய் படம் பாத்து விரதத்தை முடிச்சன்.)

யாழ்ப்பாணத்தில சண்டை தொடங்கின பிறகும் கொஞ்சக் காலம் கரண்ட் இருந்தது. அப்ப நாங்கள் படங்கள் பாக்கிறனாங்கள். பிறகு ஒரேயடியாய் கரண்ட் போச்சுது. அதோடை படம் பாக்கிறதும் குறைஞ்சு போச்சு. எண்டாலும் அப்பப்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்த வீட்டில படங்கள் போடுவம்.

அந்தக் காலத்தில தான் புலியள் தணிக்கை முறையை கொண்டு வந்தினம். படம் தொடங்கும் போது முதலில புலிகளின் தணிக்கைச் சான்றிதழ் வரும். பிறகு தான் இந்திய தணிக்கை சபையின் சான்றிதழ் வரும். பாட்டுக் கட்டங்கள் போகும் போது சில இடங்களில ரோஜா பூ காட்டுப் படும். அந்த இடங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன என்று அர்த்தம்.

அந்த நேரம் சின்னத்தம்பி படம் நல்ல பிரபல்யம். எங்கடை வீட்டிலும் போட வேணும் எண்டு ரண்டு மூண்டு தரம் முயற்சித்தும் கசெற் கிடைக்கேல்லை. கடைசியா ஒரு மாதிரி கசெற் கிடைக்க ஜெனரேற்றர் வாடகைக்கு எடுத்து வந்து படத்தை போட்டால் கொஞ்ச நேரத்தில அது பழுதாப் போட்டுது. எனக்கு அழுகையே வந்திட்டுது. என்ரை அத்தான் எனக்கு நல்ல பேச்சு. ‘சனம் சாகக் கிடக்குது. உனக்கு சின்னத்தம்பி பாக்க முடியேல்லையெண்டு அழுகையோ?’

பிறகு கொஞ்சக் காலத்தில படங்கள் ஒரேயடியாகத் தடை செய்யப்பட்டு விட்டன. யுத்தத்தில சிக்குப்பட்டிருக்கிற மக்களுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகமாக இருக்கிற சினிமாவை தடை செய்தது பற்றி பரவலான விமர்சனங்கள் வந்தன.

இந்த இடத்தில ஒரு கதையை சொல்ல வேணும். படங்கள் தடை செய்யப்பட்டிருந்த 95 ம் ஆண்டில யாழ்ப்பாணம் கோட்டையில் புலிகளின் காப்பரண்களுக்கான பதுங்கி குழிகள் வெட்டுவதற்காக ஒரு குறித்த சுற்று முறையில் எங்கள் ஊரின் சங்கமொன்றினூடாக நாங்கள் அங்கை போயிருந்தம்.

கோட்டைக்குப் பக்கத்திலை முந்தி இருந்த ஒரு தியேட்டரின் முன் சுவர் மட்டும் இருந்தது. மற்றதெல்லாம் உடைஞ்சு போட்டுது. அது றீகல் தியேட்டர். (இதைப் படிக்கிற ஆரும் பழைய ஆக்களுக்கு பழைய ஞாபகங்கள் வருதோ?) அதன் முகப்பில் அங்கு கடைசியாக ஓடிய ஒரு ஆங்கில படத்தின் பெயர் எழுதப் பட்டு வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு கிடந்தது.

அதைப் பாத்து ஒரு பெருமூச்சுத்தான் வந்தது. ம்.. அந்தக் காலம் இந்த மாதிரியான படமெல்லாம் யாழ்ப்பாணத்தில ஓடியிருக்கு. (இது 95 இல் எனது அறிவுக் கெட்டிய நிலையில் எழுந்த எண்ணம்.)

பிறகு கன காலத்துக்கு பிறகு வன்னியிலை இருக்கும் போது திரைப்படங்களுக்கான தடையை புலிகள் நீக்கினார்கள். எண்டாலும் தணிக்கை தொடர்கிறது இப்ப வரைக்கும். கன காலத்தக்கு பிறகு வன்னியிலை காதல் கோட்டை, பூவே உனக்காக மற்றது மாணிக்கம் எண்ட மூண்டு படங்களை ஒரே இரவில பாத்தன்.

இந்தியா போன பிறகு அங்கை இருக்கிற குஞ்சு குருமன் எல்லாம் அஜித் அக்ரிங் சுப்பர் நக்மா டான்ஸ் சுப்பர் எண்டு கதைக்க ஐயோ எனக்கு ஒண்டும் தெரியேல்லையே எண்டு வெக்கமா இருந்தது. பிறகு ஒரு மாதிரி இந்தியாவில சும்மா இருந்த காலத்தில சினிமா ருடே சினிமா எக்ஸ்பிரஸ் அது இது எண்டெல்லாம் வாங்கிப் படிச்சு என்ரை அறிவை வளர்த்துக் கொண்டன்.

This entry was posted on Thursday, April 7th, 2005 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 Responses to “நான் படம் பார்த்த கதை”

  1. கறுப்பி on April 7th, 2005 at 4:52 pm

    ஆகா ஓகோ என்னமாய் எழுதுறியள்.. அதுசரி சயந்தன் சின்னப்பெடியன் எண்டெல்லோ நினைச்சுக் கொண்டிருக்கிறன். (வசந்தன் மாடுமாதிரி எண்டு சொன்னது எரிச்சலில எண்டு நினைச்சன்) நீங்கள் என்னென்டா ராதா நதியா அமலா கால ஆளோ?
    அது சரி இந்தியாவில சும்மா இருந்த காலத்தில நடிக்க “றை” ஒண்டு போட்டிருக்கலாமே.. (வசந்தனுக்கு எரிச்சல் வரட்டும்)

  2. வசந்தன்(Vasanthan) on April 7th, 2005 at 4:56 pm

    எங்கட சனம் படம் பாக்கிற விறுத்தம் தெரியும்தானே. ஒரே இரவில நாலு படம்போடுங்கள். அடிபாட்டுக்கட்டம் வரேக்க எழுப்பிவிடு எண்டிட்டு குஞ்சு குருமனுகள் படுத்திடும். கொஞ்சம் இளசுகள் பாட்டுக்கட்டம் வந்தா எழுப்பிவிடு எண்டு படுத்திடுங்கள். படம் ஒருத்தரும் ஒழுங்காப்பாக்கிறேல. சும்மா நாங்களும் படம்பாத்தம் எண்டு நாலு பேருக்குச் சொல்லுறதுக்குத்தான் அப்ப படம் பாக்கிறவ. எங்கட வீட்டயும் படம் ஓடினது எண்டு மற்றாக்களுககுச் சொல்லவேணும். அதுதான் காரணம். படிக்க மண்ணெண்ணெய் இல்லாட்டியும் எங்கட சனம் படம்பாக்கும்.
    தடை செய்தத ஆதரிச்சவையும் நிறையப்பேர் இருந்தவை. குறிப்பா என்ர அப்பா அம்மா.

  3. வசந்தன்(Vasanthan) on April 7th, 2005 at 4:59 pm

    ஹி.ஹி. எனக்கேன் கோபம் வரப்போகுது?
    நதியா, அமலாக் காலத்து ஆள். கமலுக்குப்போட்டியாத்தான் இருந்திருப்பார். எனக்குப் போட்டியா வர மாட்டார்.

  4. சயந்தன் on April 7th, 2005 at 5:18 pm

    நதியா நடிக்கும் பொழுது நான் சின்ன பெடியன் தான். எண்டாலும் அப்ப என்னை விட வயசு கூடின நதியா மேல ஒரு ஈர்ப்பு இருந்தது தான். இதை மனவியல் ஆராய்ச்சியாளர்களும் சாத்தியமானது தான் மற்றது இயல்பானது தான் எண்டு உறுதிப் படுத்தியிருக்கினம்.
    உந்த அனுபவம் கனபேருக்கு இருக்கெண்டு (உதாரணமா தன்ரை அக்காவைச் சந்திக்க வாற தோழிகளுக்கு முன்னாலை தன்னை ஒரு ஹீரோவாக காட்ட முயற்சிக்கிறது.) சொல்லியிருக்கினம்.
    கறுப்பி இப்ப விளங்குதோ? வசதி வாய்ப்பு கிடைக்கிற போது இது பற்றி குறும்படம் ஒண்டு எடுக்கிற நினைப்பிருக்கு.

  5. கறுப்பி on April 7th, 2005 at 5:37 pm

    பாலமகேந்திரான்ர “அழியாதகோலங்கள்” பாக்கவில்லைப் போலும். அப்ப நீங்கள் தவண்டு கொண்டு திரிஞ்சிருப்பியள்

  6. சயந்தன் on April 7th, 2005 at 5:49 pm

    Boys படம் பாத்திட்டு சரிநிகர் பேப்பர் காரர் ஒருவரோடை கதைச்சுக் கொண்டு இருக்கிற நேரம் அவர் சொன்னார் போய் அழியாத கோலங்கள் படத்தை பாரும் எண்டு. சரி எண்டு நானும் வாற வழியில உள்ள ஒரு வீடியோ கடைக்கு போய் அழியாத கோலங்கள் இருக்கோ எண்டு கேட்டன். அங்கை இருக்கிற ஒரு பெடியன் ஏதோ நான் விளக்கம் குறைஞ்சவனாக்கும் எண்டு நினைச்சுக் கொண்டு அப்பிடி ஒண்டு இல்லையண்ணை. ‘கோலங்கள்’ தான் இருக்கு. அதுவும் இப்ப Out. வேணுமெண்டால் மெட்டி ஒலி கடைசியா வந்த கசெற் இருக்கு வேணுமோ எண்டுறார்..

  7. கறுப்பி on April 7th, 2005 at 6:02 pm

    எங்கை போனாலும் எல்லாரும் சயந்தனை விளக்கம் குறைஞ்ச எண்டுதான் நினைக்கீனம். உண்மையில அப்பிடியோ? இப்ப அவுஸ்திரேலியாவில தேடிப்பாக்கிறதுதானே..
    அதுசரி சரிநிகர் பெடியனோ.. எனக்கும் இஞ்ச ஒண்டு ரெண்டு சரிநிகர் பெடியளைத் தெரியும்

  8. வசந்தன்(Vasanthan) on April 7th, 2005 at 7:37 pm

    அழியாத கோலங்கள் வரேக்க சயந்தன் தவண்டிருப்பார் எண்டே நினைக்கிறன். (நானுந்தான்). இருந்தாலும் தேடிப்பிடிச்சுப் பாத்த படம். எனக்கு மனதில நிக்கிறது அந்த இந்து ரீச்சர் தான். மற்றாக்களுக்கு எப்பிடியோ தெரியேல. அந்த வயல்வெட்டயில மூண்டு பேரும் இருந்து பீடி குடிப்பாங்களே. கண்கொள்ளாக் காட்சி. தமிழில கதையில்லாமல் வந்த ஒரு படமெண்டா அது அழியாத கோலங்கள்தான் எண்டு பாலுமகேந்திராவின்ர செவ்வியொண்டில படிச்ச ஞாபகம்.

  9. யதுகிரி on April 8th, 2005 at 2:03 pm

    சினிமா அறிவில்லாமல் இருந்ததில என்ன குடிமுழுகிப் போச்சு என்டு இந்த அலட்டல்?.. நீங்களாவது பரவாயில்லைää எனக்கு எந்தவொரு நடிகரையும் அந்தக் காலத்தில தெரியாது. நதியா சப்பாத்து என்டு அம்மா வாங்கித் தரேக்க அம்மாவைக் கேட்டன் ஏன் அந்தப் பேரெண்டு… அப்பத்தான் நதியா ஒரு நடிகை என்று தெரிஞ்சு கொண்டேன்… எனக்கு நினைவு தெரிஞ்சு முதல் பாத்த படம் ஒளவை சண்முகி.. கமல் மாத்தி மாத்தி 2 கெட்டப்பிலயும் வரேக்க எனக்கு பெரிசா படம் விளங்கேல… அதுக்குப் பிறகு .. படம் பாக்கணும் என்ட ஆர்வமும் வரேல…

    படத்தை பற்றி கதைக்கேக்க தான் ஞாபகத்துக்கு வருது.. போன வருஷம் யாழ்ப்பாணம் போன போது ” அம்மா நலமா? ” கசெற் வாங்கி வைச்சிருந்தன் கொழும்புக்கு கொண்டு வர.. நான் நின்ட வீட்ல நீர்கொழும்பில இருந்து வந்த பிள்ளையும் இருந்தது… அது ஒரு ஆர்வத்தில அதைப் பாத்து கொண்டிருந்திச்சு.. ஒரு 5 நிமிஷம் போக முதல்.. அவட அம்மா ஓடி வந்து என்ட காலில விழாத குறை… தன்ர பெடி ஒரு மாதிரியாம்… உதைப் பாத்திட்டு இயக்கத்துக்கு போடுமாம் என்டும்…. அதால நிப்பாட்டிப போடு என்டு தான் உந்தப் பாடு.. எனக்கு சப்பெண்டு போச்சு….. அம்மா நலமாவைப் பாத்திட்டு இயக்கத்துக்குப் போறதெண்டா…….

  10. Anonymous on April 8th, 2005 at 5:26 pm

    எழுதிக்கொள்வது: ஒருவன்

    // அம்மா நலமாவைப் பாத்திட்டு இயக்கத்துக்குப் போறதெண்டா…….//

    யதுகிரி ..நீங்கள் வேறு! பாட்டுக் கேட்டு விட்டே சிறுவர்கள் வன்முறையாளர்களாகின்றனராம். படத்தையும் பார்த்தால்..

    1.20 10.4.2005

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231