கேள்வி கேட்டல்! எனது உரிமை


கேள்வி கேட்டு வாழும் உரிமை!
அங்கீகரித்தே ஆக வேண்டிய அதி முக்கிய உரிமை அது!
ஈழப்பிரச்சனை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் அதிகம் அடி படுகின்ற உரிமையாக இது இருக்கிறது.

‘உனது கருத்தில் எனக்கு கிஞ்சித்தும் உடன் பாடு கிடையாது. ஆயினும் நீ உனது கருத்தினைச் சொல்ல உனக்கு இருக்கின்ற உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்.’

ஜனநாயகத்திற்கு சரியான அர்த்தம் கூறும் கருதுகோளாக மேற்கண்ட வாக்கியம் அமைந்திருக்கிறது. (அதனை நான் முதலில் படித்தது ஈபிடிபி யின் ஒரு பத்திரிகை அறிக்கையிலிருந்து என்பது வேறு விடயம்… முருகா…)

அதற்கு ஈழத்தில் இடமிருக்க வில்லை என்பது உண்மைதான். முழு இலங்கையிலுமே இடமிருக்கவில்லை.

அது பற்றி அலசுவது எனது நோக்கமில்லை.

நான் எப்பிடி கேள்வி கேட்கும் உரிமையை பிரயோகித்தேன் என்பதைக் கூறுவதற்குத் தான் இந்தப் பதிவு.

நாங்கள் பள்ளிக்குடத்தில படிக்கிற நாட்களில புலியள் பள்ளிக்குடத்துக்கு வந்து சில கலந்துரையாடல்கள் நடத்துறவை. நேரடியாவே சொல்லுறன்.. கருந்துரையாடல்களின் நோக்கம் பெரும்பாலும் இயக்கத்துக்கு இணைந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதை விளக்கிறதா தான் இருக்கும்.

அப்ப 14 ,15 வயசில எல்லாம் இயக்கத்துக்கு சேருவது நடந்து கொண்டிருந்தது தான். புலிகள் பகிரங்கமாக 18 வயதிற்கு மேலேயே உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னது 2000 ம் ஆண்டுக்கு பின்னதாகää ஒலரா ஒட்டுணுவைச் சந்தித்த பின்னர் தான்.

கட்டாய ஆட்சேர்ப்பு குறித்து அப்போதே பேசப்படும். இது பற்றி சில வார்த்தைகள் இப்போது பேசினால் நல்லது. கட்டாயமாக கடத்திக் கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக் குறித்து நான் வாழ்ந்த காலத்தில் நேரடியாய் அறிந்தது இல்லை. கட்டாயமாக கடத்திக் கொண்டு போனார்கள் என்று சொன்னவர்கள் இரண்டு வகையில் இருந்தார்கள்..

ஒரு வகை புலிகளுக்கு எதிரானவர்கள்.

மற்றவர்கள் சுவாரசியமானவர்கள். ஆர்வக் கோளாறில் இயக்கத்துக்கு சென்று இணைந்து விட்டு, பயிற்சி கடினம் போன்ற சிரமங்களினால் பத்துப் பதினைந்து நாட்களில் திரும்பி வந்தவர்கள் தங்கள் மானம் கெட்டுப் போய் விடக் கூடாதே என்பதற்காக சொல்கிற ஒரு திருகுதாளம்.. ‘நான் விரும்பிப் போகேல்லை.. இழுத்துக் கொண்டு போட்டாங்கள்.’

(ஆயினும் புலிகளின் சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இளைஞர்கள் வற்புறுத்தலாக கூட்டிச்செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதனை அண்மைக்காலத்தில் அறிந்திருக்கிறேன். 2002 இல் மட்டக்களப்பு சென்று வந்த எனது பத்திரிகையாள நண்பன் சொன்னது கேட்டு கவலைப்பட்டேன்.)

சிறுவர்கள் இயக்கத்துக்கு சேர்கிறார்கள். நிலையான வதிவிடம், சரியான வருமானம் ஏதுமற்ற குடும்பம் இதற்குள் இருக்கின்ற ஒரு சிறுவன் ஆகக் குறைந்தது ஒரு வேளைச் சாப்பாடாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயக்கத்தில் சேர்கிறான்.

அவனுக்கு சிறுவர்களுக்கான உலக அமைப்புக்கள் தெரியாது. அவர்களை எப்படி அணுகுவது என்று தெரியாது. அவர்களுக்கு எது தெரிகிறதோ அதைச் செய்கிறார்கள். புலிகள் இயக்கத்தில், சிறுவர்களை சேர்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் அவ்வாறு சிறுவர்கள் சேராது இருப்பதற்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்யலாம். இது உலக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

(இப்போது கிளிநொச்சியில் யுனிசெப்பின் அனுசரணையோடு அமைப்பில் இணைந்த 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு (அவர்களில் குடும்ப ஆதரவு அற்றவர்களுக்கு) புனர்வாழ்வு அளிக்கும் மையங்களை புலிகள் செயற்படுத்துகிறார்கள்.)

ஏதோ சொல்ல வந்தன்.. சரி.. பள்ளிக்குடத்துக்கு புலியள் கருத்தரங்குக்கு வாறவை. வந்தால் கதைச்சுப்போட்டு ‘உங்கடை கேள்வியளைக் கேளுங்கோ எண்டுவினம்.’

அப்ப வழமையா ஒரு நடைமுறை இருந்தது. கேள்வியளை பேப்பரிலை எழுதிக்குடுத்தால் எல்லா கேள்வியளையும் வாங்கிட்டு பிறகு ஒவ்வொண்டா பதில் சொல்லுப்படும்.

நான் கேள்வி எழுதிக் குடுக்கிறதிலை விண்ணன். இண்டைக்கு மீற்றிங் எண்டால் உடனை கொஞ்சக் கேள்வியள் றெடி பண்ணிடுவன். இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடக்கு. ஒண்டும் உருப்படியான கேள்வியள் இல்லை.

என்ரை கேள்வியளைப் பாருங்கோ..

‘ரஜீவ் காந்தியை நீங்கள் தான் கொலை செய்தீர்களா’

‘மாத்தையா எங்கை அவருக்கு என்ன நடந்தது.’

‘உங்களிடம் விமானங்கள் இருக்கா’

(இதெல்லாம் 94 களில கேட்ட கேள்விகள்.)

உந்தக் கேள்விகளையும் மதிச்சுப் பதில் சொல்லுவினம்.

ரஜீவ் கொலை தொடர்பாக நேரடியாக ஒரு பதிலும் சொன்னதா நினைவில் இல்லை. மாத்தயா விவகாரம் பற்றி அரசல் புரசலா சொல்லுவினம். நடக்க இருந்த ஒரு சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது எண்டு சொல்லியிருக்கினம். விரைவில பகிரங்கமா அறிவிப்பினம் எண்டும் சொல்லியிருக்கினம். (ஆனாலும் மாத்தயா விவகாரத்தில் என்ன நடந்தது முதல் அவருக்கு எப்ப மரணதண்டனை வழங்கப்பட்டது என்பது வரை நான் 2002 கடைசிகளில் அடேல் பாலசிங்கத்தின் புத்தகத்தில இருந்து தான் தெரிஞ்சு கொண்டன்.)

பிளேன் பற்றின கேள்வியளுக்கு சிரிச்சுக் கொண்டே பலாலியில நிக்கிற ஆமியின்ரை பிளேனெல்லாம் எங்கடை தான் எண்டுவினம்.

என்ன செய்யறது.. ‘சித்தாந்தத்தனமாவும்’ ‘அறிவு பூர்வமாவும்’ கேள்வி கேட்க எனக்கு தெரியேல்லை.

ஒரு முறை மேஜர் சிட்டு கருத்தரங்கு வைக்க வந்தவர். அவர் ஒரு பாடகர். சோகம் ததும்புகின்ற பாட்டுக்களுக்கு அவரின் குரல் அந்த மாதிரி இருக்கும். மீற்றிங் தொடங்க முதல் பெடியள் எல்லாம் அவரைப் பாடச் சொல்லி கத்தினாங்கள். நான் மீற்றிங் வைக்கத்தான் வந்தனான் பாட இல்லை எண்டு சொன்னார். நாங்களும் விடேல்லை. கடைசியா உயிர்ப்பூ படத்தில அவர் பாடின சின்னச் சின்ன கண்ணில் எண்ட பாட்டை பாடிட்டுத் தான் மீற்றிங் தொடங்கினார்.

97 இல ஜெயசிக்குறு சண்டையில அவர் வீரச்சாவடைந்து விட்டார். தினத்தந்தி பேப்பரிலை அதுக்கு முக்கியத்தவம் குடுத்து செய்தி வந்தது. அதைப் பாத்த உடனை எனக்கு கவலையாயிருந்தது.

இப்பிடி நான் கேள்வி கேட்டுத் தான் வளந்தனான். என்னை விட எங்கடை அம்மம்மா இன்னும் வலு கெட்டிக்காரி. இந்தியன் ஆமி காலத்தில ஒரு நாலு இயக்கப் பெடியளுக்கு களவாச் சாப்பாடு குடுத்து குடுத்து, அவையள் நல்ல பழக்கம். (இந்தியன் ஆமி காலத்தில உப்பிடி சாப்பாடு குடுத்த அனுபவம் யாழ்ப்பாணத்தில எல்லா குடும்பங்களுக்கும் இருக்கும்.) அதை ஞாபகம் வைச்சு அவையில ஒருவர் நாங்கள் யாழ்ப்பாணத்தில இருந்த கடைசிக் காலம் வரையும் அவ்வப் போது வீட்டை வருவார்.

அம்மம்மா துணிச்சலா கேப்பா.. ‘என்ன தம்பி வாங்கிற பவுண் எல்லாம் திருப்பித் தருவம் எண்டு சொல்லுறியள்.. உண்மையாத்தருவியளோ..’ (கொடுத்த அடுத்தவருடமே குலுக்கல் முறையில் அந்தக் கடனை இரண்டு பவுணில் புலிச்சின்னம் பொறித்த தங்கக் காசாக எங்களுக்கு தந்து விட்டார்கள். அம்மம்மாவிற்கு இன்னும் அதிஸ்டம் வாய்க்கவில்லை. ஒவ்வொரு மாவீரர் தினக் காலங்களிலும் குலுக்கல் முறையில் குறித்த தொகையினர் தெரிவு செய்யப்பட்டு வாங்கிய கடன் மீளக் கொடுக்கப் படுகிறது.)

நாங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்றதுக்கு கொஞ்ச நாளைக்கு முதல் அவர் வீட்டை வந்திருந்தார். அம்மம்மா கேட்டா ஒரு கேள்வி.. ‘என்னவாம்.. யாழ்ப்பாணத்தில இருந்து சனத்தை எழும்பச் சொல்லப் போறியளாம்.. நீங்களும் விட்டுட்டு போக போறியளாம்.. என்ன அதுக்கோ நாங்கள் காசு தந்தம்?’

பார்க்கப் போனால் அம்மம்மாவிற்கும் சித்தாந்ததனமாகவும் அறிவுஜீவித்தனமாகவும் கேள்வி கேட்க தெரியாது போல கிடக்கு!

This entry was posted on Wednesday, April 6th, 2005 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 Responses to “கேள்வி கேட்டல்! எனது உரிமை”

  1. கறுப்பி on April 6th, 2005 at 9:46 pm

    சயந்தன் நல்ல குழந்தைத் தனமா (உங்கட வயசுக்கேற்ப) எழுதிறீங்கள். நல்லா இருக்கு. எனக்குப் போர் அனுபவங்கள் ஒண்டுமில்லை. இப்பிடி யாராவது எழுதினால் வாசிச்சு அறியலாம். இன்னும் எழுதுங்கோ

  2. Anonymous on April 6th, 2005 at 10:06 pm

    எழுதிக்கொள்வது: dasf

    நுட் உ நன்ட் டொ டெல்ல்

    20.59 6.4.2005

  3. Anonymous on April 6th, 2005 at 10:07 pm

    wut u want write hear?

  4. Anonymous on April 6th, 2005 at 11:38 pm

    எழுதிக்கொள்வது: kulakaddan

    நாங்களும் அப்போது அங்கு இருந்தவர்கள் தான். பிடித்து வென்று இயக்கத்துக்கு வேர்த்தது தெரியாது. ஒரு ஆலோசனை கூட்டத்தில் எமக்கு அடுத்த பிரிவை வேர்ந்த 6ஃ7 பேர் தாமாக சென்றதை நேரில் பார்த்தவன். எமக்கும் இதே கேள்விகள் கேட்டு அனுபவம். அந்தவயதில் அப்படி தான் கேள்விகேக்க தோன்றுமோ என்னவோ.

    23.29 6.4.2005

  5. வசந்தன்(Vasanthan) on April 7th, 2005 at 2:33 am

    //சிறுவர்கள் இயக்கத்துக்கு சேர்கிறார்கள். நிலையான வதிவிடம், சரியான வருமானம் ஏதுமற்ற குடும்பம் இதற்குள் இருக்கின்ற ஒரு சிறுவன் ஆகக் குறைந்தது ஒரு வேளைச் சாப்பாடாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயக்கத்தில் சேர்கிறான்.//

    இத நான் மறுக்கிறன். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சேர்கிறான் என்பது பொய். அதைத்தாண்டிப் பல காரணங்கள் இருக்கிறது.
    கறுப்பி சொல்வதைப்போல குழந்தைத்தனமா எழுதிறீர் எண்டு சொல்ல மாட்டன். (ஏனெண்டா மாடு மாதிரி வளந்திருக்கிறது எனக்குத் தெரியும்)

  6. வசந்தன்(Vasanthan) on April 7th, 2005 at 2:43 am

    நாங்களும் பொடியங்களா இருக்கேக்க, மாத்தையா பற்றித்தான் கேக்கிறது. அவயளும் சலிக்காமல் ஒவ்வொரு இடத்திலயும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பினம். அப்ப பள்ளிக்கூடத்திலயிருந்து ஒரு செற்றா வெளிக்கிட்டுப்போறது நடந்தது. இந்தப்பள்ளிக்கூடத்திலயிருந்து இத்தின பேராம் எண்டு கணக்குப் பரவும். கடசியா பள்ளிக்கூடத்தில அதிபர் மார் “நீங்கள் ஆரும் போறதெண்டாப் போங்கோ. ஆனா வீட்ட போய் உடுப்ப மாத்தீற்றுப் போங்கோ” எண்டு அடிக்கடி அறிவுரை சொல்லத் துடங்கீச்சினம். என்னோட படிச்ச ஒருத்தன் பள்ளிக்கூடத்திலயிருந்தே தானாக எழும்பிப்போனவன். பிறகு ரெண்டு கிழமயில ஓடியந்திட்டு அவங்கள் தான் இழுத்துக்கொண்டு போனவங்கள் எண்டு ஊருக்க கதை விட்டுக்கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்தில கூட்டமாம் எண்டு ஊருக்க கத பரவினா பள்ளிக்கூடத்துக்கு வெளியில சனம் வந்து நிக்கும்.

    பிறகு வன்னியல இன்னும் நேரடியா, மும்முரமாப் பிரச்சாரம் நடந்தது. வீடுவீடாப்போய் பிரச்சாரம் நடந்தது. ஆட்சேர்ப்பில தெருவெளி நாடகங்களுக்கு முக்கிய பங்கிருக்கு. ஆட்சேர்ப்பு எண்டதைத்தாண்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திறதில அதுக்கு முக்கிய பங்கிருக்கு. இண்டை வரைக்கும் மக்களிட்ட சேதி சொல்லிறதுக்கு அந்தளவுக்குச் சிறந்த ஊடகம் எனக்கு பிடிபடேல, சினமா உட்பட.

  7. கொழுவி on April 7th, 2005 at 6:42 am

    //கேள்வியளை பேப்பரிலை எழுதிக்குடுத்தால் எல்லா கேள்வியளையும் வாங்கிட்டு பிறகு ஒவ்வொண்டா பதில் சொல்லுப்படும்.//

    இதுவே எழுந்து நின்று உங்க கேள்விகளை கேட்கலாம் என்றால் கேட்பீர்களா? கேட்கத்தான் முடியுமா? கேட்டுவிட்டு போகத்தான் முடியுமா? பதில் சொல்லுங்கள்.

  8. கொழுவி on April 7th, 2005 at 6:57 am

    மேல ஏதோ ஒரு பரதேசி என்னோட பேரப்பாவிச்சு எழுதியிருக்கு. அதுக்கு நான் பொறுப்பில்லை. இப்படியான தவறுகளைத் தவிர்க்க நீங்கள் பதியப்பட்ட வலைப்பதிவர் மட்டுமே பின்னூட்டம் போடக்கூடியதாக உங்கள் வலைப்பக்கத்தை மாற்றுவது நல்லது.

  9. Anonymous on April 7th, 2005 at 11:34 am

    எழுதிக்கொள்வது: shiyam Sunthar

    புலி உறுப்பினர்களை சந்திக்கின்ற போதெல்லாம் இயல்பான ஒரு நெருக்கத்தோடு (எங்கடை பெடியள்) இவ்வாறான கேள்விகளையும் தங்கள் கோபங்களையும் மக்கள் வெளிக்காட்டியிருக்கிறார்கள். அதுவும் யாழ்ப்பாணத்தை கைவிட்ட காலப்பகுதியில் மிகக் கடும் கோபத்தோடு மக்கள் புலிகளை அணுகினார்கள். புலிகளும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டிருந்தார்கள்.

    14.28 8.4.2005

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231