விரியும் சூனிய வெளியும்..


prison.jpgகுப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. செத்து விட வேண்டும் . இடுப்பிலிருக்கும் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை. வீடு கொடுத்தவர்களின் கதி என்னாயிற்றோ?. அவர்களையும் அள்ளிச் சென்றிருக்கக் கூடும். என்னைப் போலவே கைகளைப் பின்னால் முறித்து தலையைத் தேய்த்து…

எங்கு பிசகியதெனத் தெரியவில்லை.… ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ? அருள் இடத்தை விட்டு அகன்றிருப்பான் என்றே தோன்றியது. அவன் சுழியன்! கடைசியாய் ரத்மலானையில் வாகனத்துக்குள் சக்கை அடைந்துகொண்டிருந்த போது அவன் அருகில் நின்றிருந்தான். “வாகனத்தின்ரை செஸி நம்பரை இடிச்சு அழிக்க வேணும். அலவாங்கொண்டு கிடைச்சால் நல்லது”

சாகீருக்கு அது அவசியமானதாகத் தெரியவில்லை. “ஆயிரம் கிலோ சக்கை.வெடிச்சால் வாகனம் புக்கைதான். செஸி நம்பர் சிக்குமெண்டு நினைக்கேல்லை. எண்டாலும் இடிச்சு ரண்டு மூண்டு நம்பரை அழிச்சு விடுவம்” என்றான் அவன். இரும்பில் உள்ப்புடைத்திருக்கும் இலக்கங்களை அழித்து விடுவது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமாயிருக்கவில்லை.

சாகீரின் கைகளைப் பின்புறமாகக் கட்டி கண்களை மறைத்து கிட்டத்தட்ட பிணம் போல இழுத்து வாகனத்தில் தூக்கியெறிந்த போது அவன் நிர்வாணப்படுத்தப் பட்டிருந்தான். இடுப்புக் கயிற்றை வெட்டியெறிந்த போது சதையில் கீறல் விழுந்திருந்தது. அவர்கள் பிளேடைப் பாவித்திருக்க வேண்டும். மெலிதாக இரத்தம் கசிவதை உணரக் கூடியதாயிருந்தது. தட தடவெனஆட்கள் வாகனங்களில் வந்து ஏறினார்கள். இன்னும் சில வாகனங்கள் சர் சர் என உயிர்பெறும்சத்தம் கேட்டது. நிறையப் பேர்தான் வந்திருக்கிறார்கள். முன்னிரவே வந்து சுற்றிவளைத்திருக்கக்கூடும். கிட்டத்தட்ட ஒரு ஒபரேசன் போலத்தான் முடித்திருக்கிறார்கள். போகும் வழியில் கொலை செய்து களனி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்களா? அவ்வாறேதும் நடந்தால் எவ்வளவுநல்லது?

சாகீரை சீற்றுக்களுக்கிடையில் குப்புறக் கிடத்தி அவன் கழுத்தில் முதுகில் குண்டியிலென துப்பாக்கிகளாலும் சப்பாத்துக் கால்களாலும் அழுத்தி வைத்துக்கொண்டார்கள். அவனுக்கு நேர் மேலே மூன்று பேர் இருக்கிறார்கள் என்பதனை கால்களை வைத்து அனுமானித்துக் கொண்டான்.வேறும் பலர் இருக்கக் கூடும். துப்பாக்கியின் சுடு முனையொன்று தோள்மூட்டை இறுக்கிக்கொண்டிருப்பது நொந்தது. இது வெடித்தாலே போதும். டேய்.. சுடன்ரா பேப் ..… ´

சந்திராவோடுபோயிருக்கலாம். சந்திராவிற்கு வாகனமோட்டுவதில் சிக்கல் இருந்தது. இங்கத்தய தெருக்களில் அவனால் அறவே முடியாது. இனிப் பழக்கியெடுப்பதற்கும் முடியாதிருந்தது. சந்திராவிற்குப் பதில் தான் போனால் என்ன என சாகீருக்குத் தோன்றியது. ஆனால் சந்திரா ஒரு போதும் உடன்பட மாட்டான். “மனிசராயப் பிறந்தவைக்கு ரோசம் இருக்க வேணும்” எனசொல்லிக் கொண்டு வந்தவன் இதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான். “முன்னாலயும் வையுங்கோ -அங்கையிங்கை பிசகிப் போனாலும் நான் வெடிச்சிட வேணும். அப்பிடியே இல்லாமல் காத்தோட காத்தாப் போயிடணும். மூஞ்சை வெளிய தெரிய வந்தால் – பிறகு எங்களோடை பழகினவைக்குத்தான் கரைச்சல்.”

அடுத்த நாள் சந்திராவை அழைத்துக் கொண்டு குலேந்திதான் போனான்.கொஞ்சத் தூரத்தில் அவனை விட்டுத் திரும்பியவனை அருள் அழைத்து வந்தான். சந்திரா புறப்பட்டகொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்டது. ஆயிரம் கிலோ வெடிமருந்தின் அதிர்வை சாகீரும் உணர்ந்தான்.

(2)
“சொல்லு, ஜொயின்ட் கோப்ரேசன் அற்றாக்கிற்கு யார் றெக்கியெடுத்தது? யார் பிளான் பண்ணியது? யார் இடித்தது ?”

இந்தக் கேள்வியை அந்த உடல் பருத்தவன் சீக்ரெட்டை ஊதி ஊதி நான்காவது தடவை கேட்கிறான். சுவர் மூலைக்குள் தன்னை அடக்கிக் குந்தி முழங்கால்களை கைகளால் வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்த தினேசலிங்கத்தின் உதட்டிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

“சொல்லு.. இந்த மிசன்ரை மாஸ்டர் மைன்ட் யார்?”

“தெரியேல்லை சேர்” தலைக்குள் மின்னல் துகள்களை விசிறுவது போல் விழுந்த குத்து பொய் மூக்கை உடைத்திருக்க வேண்டும். ரத்தம் வழிந்தது. தினேசலிங்கம் கேவிக் கேவி அழத்
தொடங்கினான். “சேர் உண்மையா எனக்கொண்டும் தெரியா சேர். ஊரில கோப்பிரேசன் எண்டு சங்கக் கடையைச் சொல்லுறவை. சிலர் தவறணையையும் சொல்லுறவை. ஆனா இங்கை கொழும்பில அது எது எண்டு எனக்குத் தெரியாது சேர். நான் வெளிநாடு போக வந்தனான் சேர்..”

உதையிறதுக்கும் குத்துவதற்குமென வசதியாக முன்னால் கதிரை போட்டிருந்தவனுக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. “என்ன நக்கலா ? வெளிநாடு போறதுக்கெண்ட பெயரில தான் நீங்க இங்கை இருக்கிறீங்கள். அதுதெரியும். உங்கடை நெற்வேக்கை முழுசா பிடிச்சிருக்கிறம். அதனால ஒண்டையும் மறைக்காமல் சொல்லு. நீயா சொன்னால் நல்லது.”

தினேசலிங்கத்துக்கு தண்ணி குடிக்க வேண்டும் போல இருந்தது. உலர்ந்து போன உதடுகளை இரத்தம் மட்டுமே ஈரப்படுத்திக் கொண்டிருந்தது. எச்சில் விழுங்கும் போது இரத்தமும் உட்சென்றது.எனக்கொரு சின்னக் காயம் என்றாலும் அம்மா எப்படித் துடித்துப் போவாள்..?இதெல்லாம் தெரிந்தால்… ? அம்மாவிற்கோ நாமலாவிற்கோ விசயம் தெரிய முதல் வெளியில் போய்விட வேண்டும் கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போனால் எப்பிடியும் விட்டு விடுவார்கள்.

“என்னடா ……..யாண்டி? பதில் சொல்ல மாட்டியா..? எழும்புடா எழும்பி நில்” அவன் பூட்ஸ் காலை முகத்துக்கு நேரே நீட்டினான். உதைக்கவில்லை. உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இன்னொருவன் முன் நிற்க வேண்டியிருந்ததை நினைத்து தினேசலிங்கம் குறுகிப் போனான். இன்னும் எத்தனை பேருக்கு என்னைத் தோலுரிக்க வேண்டும்

“ரஞ்சன் விஜயரட்ண கொலையில உனது பங்கு என்ன?அடுத்தது யார் லிஸ்ட்டில? வரதனைப் பற்றிச் சொல்லு இந்திராவைச் சந்தித்திருக்கிறியா? யாரெல்லாம் ஏஜென்ட்? யார் கோர்டினேட்டர்”

ரஞ்சன் விஜயரட்ண என்ற ஒருவர் அமைச்சராக இருந்தார் என்பதைத் தவிர வேறெதுவும் தினேசலிங்கத்திற்கு தெரிந்திருக்கவில்லை. அவர் செத்த போது அவன் கொழும்பிற்குக் கூட வந்திருக்கவில்லை. தினேசலிங்கம் பதிலேதும் இன்றி நின்றான். அது அவனை சினப்படுத்தியிருக்க வேண்டும்.

“ஒளிக்காமல்சொல்லு. உனக்குஎல்லாம் தெரியும்.”

“சேர்..எனக்குஉண்மையாவே.. ” தினேசலிங்கம் முடிக்கவில்லை. இடுப்பிற்கு கீழே சப்பாத்துக்கால் பதிந்தது. அம்மா… கைகளால் பொத்திக் கொண்டு தினேசலிங்கம் சுருண்டு விழுந்தான். “பறத் தெமிழு..” முதன் முறையாக அவன் சிங்களத்தில் வார்த்தைகளை உதிர்த்தான். அவை சிங்களத் தூசண சொற்களாயிருக்க வேண்டும். தினேசலிங்கம் மேலும் மிதிபட்டான். அவனை மிதித்தவர்களில் ஒருவன் அழகாகத் தமிழ் பேசினான்.

(3)
என் இனிய நாமலாவுக்கு நான் நலம் நீர் எப்பிடி? உம்மை பிரிஞ்சு வந்து ஒண்டரைக் கிழமையாயிட்டுது. என்ன தைரியத்திலோ மூண்டு வருசம் தானே எண்டு ஈசியா சொல்லிட்டு வந்திட்டன். ஆனா ஒரு நாள் கூட உம்மை பார்க்காமல் இருக்கிறது எவ்வளவு கொடுமை எண்டு இப்பதான் விளங்குது. ஏதோ உம்மடை நினைவுகளில தான் நாட்களை போக்காட்டுறேன். நாமலா கடவுளைப் பிரார்த்தியும் இந்த மூண்டு வருசமும் கெதியா ஓடிப் போயிடோணும். நேற்றுத்தான் பாஸ்போட் குடுத்திருக்கிறன். ஒரு கிழமையில விசா குத்தி வருமாம். முடிஞ்சவரைக்கும் உழைச்சுக்கொண்டு நான் திரும்பின உடனை கல்யாணம். அதுக்குப் பிறகு நான் போக மாட்டன். ஊரிலயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திடுவன். நாமலா.. அம்மாவை அடிக்கடி போய் பாரும்.ஏதாவது உதவி தேவையெண்டா செய்து குடும். பாவம் அவ. இனி நாங்கள் தானே பார்க்கவேணும். நாமலா.. கடைசியா சீக்காய் வயல் பின் காணியில நீர் தந்ததை என்னால மறக்க முடியாது. அந்த முத்.……… ´இந்த இடத்தில் தினேசலிங்கத்தின் பிடரியில் அடிவிழுந்தது. பேனா பெரிய கோடொன்றை பேப்பரில் இழுத்தது. நான்கு பேர்தான் வந்திருந்தார்கள். தினேசலிங்கத்தின் பாஸ்போட் அவர்களில் ஒருவனின் கைகளில் இருந்தது. இது நீதானே பாஸ்போட்டை அவன் விரித்துக் காட்டினான்.ஓம்.. லொட்ஜில் மற்றவர்கள் கூடிவிட்டார்கள். தினேசலிங்கம் லொட்ஜ் முதலாளியைக் கண்களால் தேடினான். அவருக்கு சிங்களம் தெரியும்.

“வா எங்களோடை”

“சேர் நான் வெளிநாடு போக வந்திருக்கிறன். வந்து ஒரு கிழமைதான் ஆகுது”

“கதைக்காத.. வா..” ஒருவன் பின் கழுத்தில் கை வைத்து தள்ளினான். தினேசலிங்கத்துக்கு அழுகை வருமாப் போல இருந்தது.அடிப்பார்களோ..?

தன்னை யாரோ காட்டிக் கொடுத்துவிட்டதாய் தினேசலிங்கம் நம்பினான். யாராயிருக்கும்..வந்ததில இருந்து வெளியாலும் திரியாமல் லொட்ஜில் தானே நிற்கிறேன். நாமலாக்கு கடிதம் குடுத்து அடி வாங்கின பொடியன் இங்கைதான் நிற்கிறதா சொன்னவள். ஒருவேளை அவன்தான் போட்டுக் குடுத்திட்டானோ

தினேசலிங்கத்துக்கு கொழும்பு பிரமிப்பாகத்தான் இருந்தது. என்றாலும் வெளிய திரிய பயமாய் இருந்தது. குண்டுகள் வேறு வெடித்துக் கொண்டிருந்தன.எதற்கு வீண் சோலி? அபுதாபிக்கான மூன்று வருட வேலை ஒப்பந்த விசா கிடைக்க வேண்டியிருந்தது. அதுவரையும் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். செலவுக்கென அம்மா கொஞ்சம் பணம் தந்திருந்தாள்.அது சாப்பாட்டுக்கும் வாடகைக்குமே சரியாயிருந்தது. ஜேர்மனியில் இருக்கிற சாந்தியன்ரியின் நம்பரை அம்மா தந்திருந்தா. சாந்தியன்ரி ஏதாவது உதவி செய்யலாம் என அவ நம்பியிருக்கக் கூடும்.

“ஹலோ நான் தினேசலிங்கம். சுபத்திரையிடை மகன். கொழும்பில இருந்து கதைக்கிறன்.அம்மா உங்களோடை கதைக்க சொன்னவ. நான் தாற நம்பருக்கு ஒருக்கா எடுக்கிறியளோ..?” ஒரு நிமிசக் கோல் எடுத்து ஒருமுறை சொன்னான். ஒரு நிமிசத்துக்கு நூற்றியம்பது ரூபா.

“ஓ..ஆர்.. தினேசலிங்கமோ.. ஆ.. ஊரில இருந்தோ.. இவர் வேலைக்கு போட்டார். வந்தவுடனை எடுக்கசொல்லுறன்.” சாந்தியன்ரி நம்பர் வாங்காமலேயே போனை வைத்தது தினேசலிங்கத்துக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. இனி அவக்கு எடுக்கிறேல்லை.அம்மாக்கு இதைப் பற்றி எழுதக் கூடாது. கவலைப் படுவா. அம்மா எவ்வளவு நல்லவ.. நான் நாமலாவை காதலிக்கிறன் எண்டு தெரிஞ்ச உடனை எப்பிடிப் பக்குவமா நடந்து கொண்டா. நாமலாவின் அப்பாவோடு அம்மா தான் பேசினா.அவயளுக்கும் விருப்பமாத்தான் இருந்தது. ஆனா கல்யாணத்துக்கு முதல் கொஞ்சம் காசு உழைக்கவேணும் எண்டு நான் தான் விரும்பினேன். நாமலாக்கு இதில துண்டற விருப்பம் இல்லை. ஆனா குடும்ப உறவுகளுக்கை பணமும் ஊடாடுகிறது என்பதை தெரிஞ்சு வைத்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவிருந்தது.

“நாளைக்கு காசு பணம் இல்லையெண்டால் பெஞ்சாதி பிள்ளையளோடை எரிஞ்சு விழுந்து வாழ்க்கை அந்த சந்தமில்லாமல்ப் போயிடும். உன்ர அப்பாவோடை நல்ல அனுபவம் எனக்கு. நீ கொஞ்சம் காசைச் சேர்த்து வைச்சுக் கொண்டு கல்யாணம் கட்டுறது தான் நல்லது.” அம்மாவிற்கும் அந்த நினைப்பிருந்தது.

தினேசலிங்கத்தின் கையில் நேற்றுக் காலைதான் பாஸ்போட் கிடைத்தது. கிடைத்த உடனேயே கொண்டு வரச் சொல்லிருந்தார்கள். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதில் அவர்கள் பிரபலமானவர்கள். பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளுக்கும் அனுப்புகிறார்களாம். ஆனால் அதுக்கு லட்சங்கள் தேவைப்படும். பம்பலப்பிட்டியில் பஸ் எடுத்து வெள்ளவத்தைக்குப்போய் பாஸ்போட்டை கொடுத்து விட்டு மீண்டும் மருதானைக்கு வரும் போது மதியம் தாண்டிவிட்டது. இரண்டொரு நாட்களில் விசா குத்தித் தருவார்கள்.

அன்று இரவு இராணுவ கூட்டுப்படைத் தலைமையகத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய வாகனத்தின் செஸி நம்பரைப் பெற்றுக்கொண்ட இலங்கை குற்றப் புலனாய்வுப் படைப் பிரிவினர் வாகனம் பதிவு செய்யப் பட்டிருந்த முகவர் நிலையத்திற்குள் புகுந்தனர். அந்த முகவர் நிலையம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

(4)
“நான்தான் தினேசலிங்கம் கதைக்கிறன். எனக்கு இப்ப சிறை வாழ்க்கை பழகிட்டுது. பின்னே. ? தொன்னூற்றொன்றிலிருந்து ரண்டாயிரத்து ஒன்று . பத்து வருசம்.. பிறகொரு ஏழு…வருசம்.. மொத்தம் பதினேழு வருசம் சிறைக்குள்ளை இருந்தால் பழகித்தானே போகும். இந்த பதினேழு வருசத்தில பூசா வெலிக்கடை களுத்துறை எண்டு நிறையச் சிறைகள் மாற்றி விட்டினம். ஆனால் சிறை எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கு. நான் ஒரு புலி எண்டதுக்கான வீடியோ ஆதாரம் சிக்கினதாலயும் (அவங்களே துவக்கைத் தந்து வைச்சிருக்கச் சொல்லி வீடியோ எடுத்தாங்கள்) வலி பொறுக்க முடியாமல் காட்டின பேப்பர் எல்லாத்திலயும் கையெழுத்துப் போட்டதாலயும் கோர்ட்டில எனக்கு தீர்ப்பு எழுதி களுத்துறையில கொண்டு போய் போட்டினம். ஐஞ்சாறு கேஸ் எனக்கு மேலை. அதுகள் என்னவென்றே இன்று வரைக்கும் சரியாத் தெரியாது.முதல் நாள் சிறையில கொண்டு போய் போட்ட உடனை எனக்கு உலகமே இருண்டு போனமாதிரி இருந்தது. எனக்கு சொர்க்கம் எப்பிடியெண்டு தெரியாது. ஆனால் நரகத்தை அனுபவிக்கத் தொடங்கினேன். என்னை மாதிரியே எவ்வளவு தமிழ்ப் பெடியங்கள். வேறை இடங்களில பெட்டையளும் இருக்கிறதாக் கேள்வி. கொஞ்சம் கொஞ்சமா சிறை பழகத் தொடங்கியது எனக்கு.

மாசத்தில ஐஞ்சாறு என வரும் நாமலாவின் கடிதங்கள் தான் ஒரே ஆறுதல். நாமலா எனக்காக எத்தனை வருசமெண்டாலும் காத்திருப்பதாய் எழுதினாள். அப்பிடி அவள் எழுதினால் எனக்கும் சந்தோசமாய்த்தான் இருக்கும். அவ்வப் போது செஞ்சிலுவைக் காரர் வந்து எங்கையெல்லாம் அடி விழுந்தது எண்டு எழுதிப்போவினம். எழுதிக் கொண்டு போய் என்ன செய்யினம் எண்டு தெரியாது. தமிழ் அமைச்சர்களும் வாறவை. வந்தென்ன.. ?

ஒருதடவை இந்தியாவில இருந்து கார்த்தி என்பவர் வந்திருந்தார். மரியாதை தெரியாத மனுசன். 2பொட்டம்மானைக் கடைசியா எப்ப சந்தித்தாய்” என அவர் கேட்டார். கடவுளே.. ராஜீவ் கொலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சிவராசன் தாணு சுபா இவர்களெல்லாம் யார்..?

தொன்னூற்றைந்து ஒக்டோபருக்குப் பிறகு நாமலாவின் எந்தக் கடிதமும் வரவில்லை. யாழ்ப்பாணச் சனங்களெல்லாம் இடம் பெயர்ந்து போய் விட்டார்களாம். யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்ததை இங்கே சிங்கள கைதிகள் பெரிதாய்க் கொண்டாடினார்கள். நாமலா எங்கை போனாள் எண்டு தெரியேல்லை. எனக்கு நித்திரையே வாறதில்லை.அவளது பழைய கடிதங்கள் தான் துணையாக இருந்தன. அம்மாவின் கடிதமொண்டு கனகாலத்துக்குப் பிறகு வந்தது. நாமலா மல்லாவிக்கு போயிட்டாளாம். ஏன் நாமலா நீ கடிதம்போடவில்லை..?

தொன்னூற்றெட்டில் நாமலா கொழும்பு வந்திருந்தாள். அது கூட பிறகுதான் அம்மா எழுதிய கடிதத்தில் தெரிந்தது.அவளுக்கு பிரான்சில் ஒருபொடியனைப் பார்த்து கல்யாணம் பேசியிருந்தார்கள். கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாட்களில் அவளும் பிரான்ஸ் போய்விட்டாள். பாவம்.. அவளும் என்ன செய்வாள்..

எனக்குப் பெரிதாய் அழவேண்டும் போல இருந்தது. இனி அவளிடமிருந்து கடிதமேதும் வராது. உங்களுக்காய் காலமெல்லாம் காத்திருப்பேன் என அவள் சொல்லப் போவதில்லை. இரவு முழுதும் அழுது தீர்த்தேன். யார் யாரோ மீதெல்லாம் கோபம் வந்தது. அந்தக் கோபத்தில்தான் அடுத்த நாள் அந்த அமைச்சர் மீது நான் கை வைத்தேன். நானொரு காட்டுமிராண்டியாய் இருந்திருக்க வேண்டும். இல்லாட்டி அப்பிடித் தாக்கியிருக்க முடியாது. “ஏன்ரா ஏமாத்திறாய்.. செத்துப் போடா.. உன்னாலை தான்ரா எல்லாம்.. ”

அவரோடு வந்திருந்த அன்ரி “தம்பியவை என்ன இது” என்று என் கையைப் பிடித்து தடுத்தா. நான் அவவையும் பிடித்து தள்ளி விட்டேன். அவ சுவர் ஓரத்தில போய் விழுந்தா. இதற்கிடையில் யாரோ அமைச்சரின் கண்ணை மடித்துக் கூராக்கிய சாப்பாட்டுக் கோப்பையால் குத்தி விட்டார்கள். அவர் சரிந்து விழுந்தார். செத்துப்போனார் என்று தான் நினைத்தேன்.

அடுத்த நாட்களில் போட்டுத் துவைத்தெடுத்தார்கள். முதன் முறையா அடித்து கொலைசெய்யட்டும் என நினைத்தேன். அம்மா பாவம்

சமாதானம் வருகுது. எங்களையெல்லாம் விடபோறாங்கள் என மற்றவர்கள் பேசித்திரிந்தார்கள். அது உண்மை போலத்தான் இருந்தது. பத்திரிகைகளில் ஆமியும் புலிகளும் கைகோர்த்து நிற்கும் படங்கள் வெளியாகின. அன்ரன் பாலசிங்கம் லண்டனில இருந்து இரணைமடுவில போய் இறங்கினாராம். பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்பை ரூபவாகினியில போட்டு காட்டினார்கள். இப்போதெல்லாம் புலிகளைப் பயங்கரவாதிகள் என்பதை ரூபவாகினி நிறுத்தியிருந்தது.

பேச்சுவார்த்தை தொடங்கப் போகிறதாம். கைதிகள் விவகாரமும் பேசப்படும் என்றார்கள். இப்பவெல்லாம் சிறைக்கு தமிழர்கள் யாரும் வருவதில்லை. வெளியேறுவது குறித்த மகிழ்ச்சி நாமலாவின் நினைவில் சட்டென்று ஒடிகிறது. நாமலா நீ கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே..

அம்மாவும் கொழும்பு வந்திருந்தாள். அவளைப் பார்க்கவும் முடிந்தது. ஓவெனப் பெருங் குரலெடுத்து அழுதவளை ஆறுதல்ப் படுத்த முடியவில்லை. கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரவலாக செய்திகள் வந்தது. எல்லா தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வார்களா.. ?

சந்திரிகா வரையும் இந்த விவகாரம் இழுபட்டது. கடைசியில் கைதிகளைப் பரிமாறுவது என இரண்டு தரப்பும் முடிவுக்கு வந்தார்கள். தம்மால் கைது செய்யப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுதலை செய்யும் அதேவேளை அரசு கைது செய்து சிறையிலடைத்திருக்கும் தமது உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டுமென புலிகள் இயக்கம் கேட்டுக்கொண்டது. விடுவிக்க வேண்டியவர்களின் பெயர் விபரங்கள் சந்திரிகாவின் இறுதி முடிவுக்குப் போனது. வவுனியாவில் கைதிகள் பரிமாற்றம் நடந்தது. அந்தச் செய்தியை நான் பத்திரிகையில் படித்தேன். படமும் போட்டிருந்தார்கள். புலிகள் தரப்பில் விடுதலையானவர்களில் நிலவனையும் சாகீரையும் எனக்குத் தெரியும். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வெலிக்கடையில் என்று நினைக்கிறேன் சாகீரைச் சந்தித்திருக்கிறேன். சாகீர் நல்ல பொடியன். மற்றவர்களுக்காக முன்நிற்பான். சிங்களக் கைதிகளுடன் சண்டை நடக்கும் போது அவனை முன் வரிசையில் பார்க்கலாம். பத்திரிகையில் சாகீர் தனது அம்மாவைக் கட்டியணைத்த படி நின்றான்.

(5)
என்னை இப்ப பூசாவுக்கு மாத்தியிருக்கு. திரும்பவும் தமிழ் பெடியங்களை பிடிச்சு வரத் தொடங்கிட்டாங்கள். அண்டைக்கு ஒரேயடியா நானூறு பேரைக் கூட்டியந்தாங்கள். இங்கை இரவில
ஆட்கள் அலறுற சத்தம் கேட்கிறது வழமையாப் போச்சு. சிலரை கொலை செய்து இரவோடிரவா குப்பை வண்டியில ஏத்திப் போறதா கதைக்கிறாங்கள்.

அமைச்சர்கள் வழமை போலவே வருகினம். நாமலாவுக்கு பிரான்சில இரண்டாவது குழந்தை பிறந்திருக்குதாம். பெடியன் நல்லா வைச்சுப் பாக்கிறானாம். ஆசொல்ல மறந்து போனன். சாகீர் இயக்கத்தை விட்டு விலகி இப்ப சுவிஸ் போயிட்டானாம். செஞ்சிலுவைச் சங்கம் தானாம் அனுப்பி வைத்தது. அம்மாதான் இதையெல்லாம் எழுதினாள். அவள் திரும்பவும் ஊருக்குப் போயிட்டாள். கொழும்பில இருக்கிறதென்றால் இலேசுப்பட்ட காரியமே..? இன்னுமொரு உண்ணாவிரதம் இருப்பம் எண்டு பெடியள் பேசிக்கொள்ளுறாங்கள்.

கெதியில வீட்டை வருவன் எண்டு அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுத வேணும். அவள் உயிரோடு இருக்கும் வரைக்குமாவது இப்படி எழுதிக் கொண்டிருக்க வேணும்.

This entry was posted on Sunday, June 7th, 2009 and is filed under சிறுகதைகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

One Response to “விரியும் சூனிய வெளியும்..”

  1. anjalin on June 18th, 2009 at 10:03 pm

    for some ppl they think thier sons, husband, brothers, uncle and for some mothers, sisters, aunty, will be coming back for them and they still belive thier live somewhere. You give the hope for those ppl form this one. And you show hope is something tamils have now and they still hope they wil be free and be happy

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231