இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர


கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.

ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுக் கொள்ள மாபெரும் மனிதப்பேரவலம் அங்கு நிகழ்ந்தேறியது. அன்றைய சில மணிநேரங்களில் செத்தவர்கள் தொகை ஆயிரத்தைத் தாண்டியது.

இந்தக் கொடும்நிகழ்வுக்கிடையில் இன்னொரு பக்கமிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ராணுவ பிரதேசத்திற்குள் புகுந்து கொண்டார்கள். இராணுவமே எதிர்பார்த்திராத இந்த நிகழ்வை அவர்கள் பெருமெடுப்பில் உலகின் மாபெரும் மனிதாபிமான நடவடிக்கை என பிரச்சாரப் படுத்தத் தொடங்கினார்கள்.

000

நடைபெறுகின்ற நிகழ்வுகள் மக்கள் பாதுகாப்புவலயத்தை விட்டு வெளியேற எத்தனிப்பதை புலப்படுத்தி நிற்கின்றன. புலிகளின் ஆளுகையிலிருந்து வெளியேறி ராணுவ ஆளுகைக்குள் வர விரும்புவதற்கான எத்தணிப்பு இது என்றல்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியான இடம்பெயர்வையும் கடந்த நான்கைந்து மாதங்களாக இருபத்து நான்கு மணிநேர எறிகணைத்தாக்குதல்களையும் நாளுக்கு நான்கைந்து தடவைக்கு மேற்பட்ட விமான குண்டு வீச்சுத்தாக்குதல்களையும் எதிர்கொண்டு உறவுகளை தின்னக் கொடுத்து பொஸ்பரஸ் எரிகுண்டுகள் க்ளஸ்ரர் குண்டுகள் நச்சுப்புகை என ஒருவித எரிந்த வாழ்வு நிலையிலிருந்து விடுபட்டு அந்தமாதிரியான குண்டுவீச்சுகளும் புகைக்குண்டுகளும் கிடையாது என நம்புகின்ற இடமொன்றிற்கு தம்மை தம் பிறந்த குழந்தைகளை பிறக்கப் போகும் குழந்தைகளை கருகுவதிலிருந்து காத்துக் கொள்ள முடியலாம் என்ற நம்பிக்கையில் வெளியேறுகிறார்கள்.

மரணித்தாலும் மானத்தோடும் மரியாதையோடும் சாவதற்கு வன்னியின் அப்பாவி மக்கள் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. கனடா லண்டன் அவுஸ்ரேலியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தம் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக இடம் பெயர்ந்த மற்றய தமிழர்களைப் போலவே உயிர்வாழ்வதற்கான ஆசையும் அதற்கான உரிமையும் கொண்டவர்கள். அதனை ஒதுக்கித் தள்ள முடியாது.

000

புலிகளின் ராணுவ வெற்றிக் கனவுகள் மிதப்புகள் மற்றும் குத்தகைக்கார மன நிலையிலிருந்து தற்போதைக்கு புலம் பெயர்ந்த மக்கள் முழுமையாக விடுபட்டிருக்கிறார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியும். புலம் பெயர் நாடுகளில் ஈழ போராட்டச் செயற்பாடென்பது மாதாமாதம் பணங்கொடுத்தல் மற்றும் நிகழ்வுகளில் கொத்துரொட்டி விற்றல் என்றிருந்த நிலைமாறி மக்கள் வீதிகள் எங்ஙனும் தமது கோரிக்கைகளோடு நிறைகிறார்கள். (ஐநா வளாகத்தில் வருடா வருடம் நடைபெறும் பொங்கு தமிழ் என்ற பெரும் பானை வைத்துப் பொங்கும் ஒரு நிகழ்வு குறித்து கருத்துக் கேட்ட வெள்ளையின நண்பர் உங்களது கலாசார விழா அழகாயிருக்கிறது என்றார். ) உணர்ச்சித் தளத்தில் நின்று மக்களின் கொலைக்கெதிராக கூடுகிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டம் இத்தனை முனைப்பும் கவனிப்பும் பெற்றமைக்கு அப்போராட்டம் தமிழ் இரண்டாம் தலைமுறையின் கைகளுக்கு சென்றமையே காரணமென சொல்லப் படுகிறது. அது உண்மையும் கூட. 94 காலப்பகுதிகளில் ஒரு தடவை ஐநா அலுவலர்களுக்கு விடுமுறை என்பது கூட தெரியாமல் போய் நின்று கத்திவிட்டு வந்தோம் என முந்திய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். அவ்வாறல்லாமல் இப்போது மக்களின் நோக்கம் எவரைச் சென்றடைய வேண்டுமென எதிர்பார்க்கப் படுகிறதோ அது நடைபெறுகிறது.

தற்போதைய போர் நிறுத்தக் கோரிக்கைகளுக்கு சார்பான ஆக்கபூர்வமான எந்த சமிக்கையும் எவரிடத்திலிருந்தும் இது வரை வரவில்லை. வரும் என்பதும் நிச்சயமற்றது. இங்கே ஒரு விடயம் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

தற்போதைய எல்லா போராட்டங்களுமே உடனடிப் போர்நிறுத்தத்தை மேற்கொண்டு பாதுகாப்பு வலய மக்களைப் பாதுகாக்கும்படியான கோரிக்கையை கொண்டுள்ளன. வரும் நாட்களில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டால் அல்லது வெளியேறினால் போர்நிறுத்தக் கோரிக்கை வலுவற்றதாகி விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி விட்டார்கள் என்பதற்காக தமிழரின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் நீர்த்துப் போய் விடாது. அது அப்படியே தான் இருக்கும்.

இங்கே இரண்டிலொன்று நடைபெறும். சிங்கள படைகள் முழுமையாக நில ஆக்கிரமிப்பினைச் செய்து மக்களை முகாம்களில் அடைத்த பின்னர் – விரக்தியுற்று இனியென்ன நடந்தது நடந்து போய்விட்டது. விதியெனச் சொல்லி வீடுகளுக்குத் திரும்புதல் அதில் ஒன்று.

மற்றையது தொடர்ந்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துப் போராடுவதன் ஊடாக இடம்பெயர்ந்த முகாம்களில் வாழும் மக்களுக்கான உடனடி மீள் குடியேற்றம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை என்பவற்றோடு தமிழருக்கான தீர்வொன்றிற்கு அரசினை நெருக்குதலுக்குள்ளாக்கும் தொடர்ச்சியான போராட்டம் மற்றையது. (இவ்வாறான ஒரு போராட்டத்தினை புலிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்டிருந்த காலப் பகுதியில் சிங்கள அரசு பேச்சுகளில் ஒப்புக் கொண்ட விடயங்களை நடைமுறையில் செயல்ப் படுத்த தவறிய தருணங்களில் நடாத்தியிருக்கலாம் என எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை)

இவற்றை விட கொஞ்சம் கலக்கம் தரக்கூடிய ஒரு எதிர்வு கூறலும் உண்டு. பொதுவாக அதிகாரங்களை விசுவாசிப்பதன் ஊடாக தன் தனி மனித மேம்பாட்டைக் கவனித்துக் கொள்ளும் இனமென்ற ஒரு பார்வை இருப்பதனால்.. சரி.. மகிந்த மாத்தையா எனப் போய்விடவும் கூடும் என்பதுவே அது.

000

a_adams_bridge_0918.jpgஎரிக்சொல்கெய்ம் தனது நெருங்கிய ஊடக நண்பர்களுக்கு இந்தியாவை மீறி தம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது என சொன்னதாகப் படித்தேன். சமாதான காலத்தில் கிளிநொச்சி வரும் எரிக் புட்டும் தோசையும் சாப்பிட்டுவிட்டு போகும் வழியில் புதுடில்லிக்கும் போய் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை செய்து விட்டு போவார். உண்மையில் ஒழுங்கு மரியாதையாக வந்து என்ன பேசினாய் என சொல்லிவிட்டு போ என்ற டில்லியின் அழைப்பே அது.

தற்போதும் கூட மக்கள் அவலத்தை முன்வைத்து பிரிட்டன் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடத்தான் விரும்புகின்றன. ஆனால் தடுப்புச் சுவர் இந்தியாவைத் தாண்ட முடியவில்லை. அதே நேரம் இலங்கையென்ற ஒருநாட்டில் வடகிழக்கு கடலோரம் சிக்கியிருக்கிற மூன்று லட்சம் மக்களுக்காக மேற்குறித்த நாடுகள் இந்தியாவோடு முரண்படவும் விரும்பவில்லை. அவ்வாறு முரண்பட முடியாதவாறு அவர்களது பொருளாதார பிராந்திய டீல்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. சீனா குறித்தான அச்ச உணர்வு எப்போதும் இந்தியாவோடு நெருங்கியும் உறவாடியும் இருப்பதற்கான தெரிவையே இந்நாடுகளுக்கு வழங்குகிறது.

இந்தியா புலிகளை அழித்த பிறகு என்ன ? என்ற நினைப்பிலிருக்கிறது எனப் புரியவில்லை. புலிகள் அழிக்கப்பட்ட பிறகு தமிழருக்கான தீர்வொன்று குறித்துச் சிந்திக்கலாம் எனவும் அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் படுமெனவும் சில கூட்டமைப்புக்காரர்களுக்கு ஆறேழு மாதங்களுக்கு முன்னரேயே சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். எந்தளவுக்கு சரி என தெரியவில்லை.

ஆனால் தமிழருக்கு தீர்வொன்றினை ஏதோ இதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்ற மாதிரி சிங்கள அரசுகள் தந்துவிடும் அல்லது எடுத்துவிடலாம் என இந்தியா நம்பினால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

அவ்வாறு அவர்கள் முயல்வாராயின் இன்று ராணுவ உதவிகளுக்கு நன்றி சொல்கின்ற சரத் பொன்சேகாவிலிருந்து பிக்குகள் ஜேவிபியினர் என பலரும் குண்டியில் படிந்த புழுதியைப் போல இந்தியாவை தட்டிவிட்டு இது என் உள் நாட்டு பிரச்சனை. நீ தலையிட முடியாது என சொல்லத்தான் போகிறார்கள்.

முடிந்தவரை சிறுகச் சிறுக உருவெடுத்து தன் முதன்மை எதிரியான சிங்களப்படைகளை எதிர்கொள்ளத் தக்கவகையில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ ஆளணி ஆயுத வளங்களோடிருந்த ஒரு விடுதலை போராட்டத்திற்கு எதிராக வல்லரசு நாட்டின் ஆயுத வள உதவியை அளித்து போராளிகளின் தியாகத்திலும் வீரத்திலும் இதுவரை காலமும் பேணப்பட்ட ராணுவ சமநிலையைக் குழப்பியடித்து ஒரு இனத்தின் விடுதலைக் கனவை கருவறுத்த இந்தியாவிற்கு நாம் என்ன செய்ய முடியும்..

இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு என எம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பதைத் தவிர…

This entry was posted on Tuesday, May 26th, 2009 and is filed under Featured, பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 Responses to “இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர”

  1. vishnu on May 27th, 2009 at 12:26 am

    that’s fair and correct in this matter, and every tamils from tamileelam waiting for a good opotunity for………..

  2. ஜோர்ச் மாஸ்டர் on May 27th, 2009 at 12:40 am

    டேய் உங்க ஆளுங்க எல்லாம் இங்க அகதியா வந்து ஏற்கனவே இருக்கிற சனத்தொகைய ஏத்துவிட்டுட்டாங்க. இந்த பிணந்தின்னி நாட்டில் இருந்து அவங்கள எல்லாம் கூட்டிட்டு போயிடு. இருந்தாலும் உங்களுக்கு வாய்கொழுப்பு இவ்வளவு கூடாதுடா

  3. tharmu on May 27th, 2009 at 10:44 pm

    dont say india. the county of sakuny(maha bharathan) or the counry of hoony(ramayanam) your all mantharai counry people.but mantharai is a grade mafia women. hi hi hi ii

  4. Indian on May 29th, 2009 at 7:26 am

    போர் நடக்கும் போது புலிகள் மட்டும் பின் வாங்க வேண்டியது தானே? எதற்கு பொதுமக்களையும் இழுத்து சென்றனர்? அவர்களை ஊரிலேயே விட்டுச் சென்றிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும் போயிருக்காது. முகாம்களில் வதைபடவும் வேண்டி இருந்திருக்காதே. எதற்கெடுத்தாலும் இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?

  5. சயந்தன் on May 29th, 2009 at 7:36 am

    இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?//

    நான் செத்த பிறகு!

  6. stalinguru on May 29th, 2009 at 9:19 am

    போர் நடக்கும் போது புலிகள் மட்டும் பின் வாங்க வேண்டியது தானே? எதற்கு பொதுமக்களையும் இழுத்து சென்றனர்? அவர்களை ஊரிலேயே விட்டுச் சென்றிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும் போயிருக்காது. முகாம்களில் வதைபடவும் வேண்டி இருந்திருக்காதே. எதற்கெடுத்தாலும் இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?//

    வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

    தோழன் முத்துகுமாரின் கடிதத்தில் இருந்து

  7. பார்த்திபன் on June 4th, 2009 at 8:49 pm

    stalinguru,
    முத்துக்குமார் சொன்னதை விடுங்கோ. அரசு மக்களுக்கான பாதுகாப்பிடம் என்று அறிவித்த இடத்தில் விடுதலைப்புலிகளுக்கு என்ன வேலை?? அங்கு வந்து மக்களிடையே நின்று கொண்டு ஏன் இராணுவத்தினர் மேல் தாக்குதல் நடத்தினார்கள்?? தாக்குதல் எங்கிருந்து வந்ததோ, அந்த இடத்தை நோக்கித் தானே இராணுவம் பதில்த் தாக்குதல் நடத்தும். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட, நீங்களும் உங்க சுய புத்தியில் சிந்திக்கலாமே??

  8. பார்த்திபன் on June 6th, 2009 at 3:17 am

    //போர் நடக்கும் போது புலிகள் மட்டும் பின் வாங்க வேண்டியது தானே? எதற்கு பொதுமக்களையும் இழுத்து சென்றனர்? அவர்களை ஊரிலேயே விட்டுச் சென்றிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும் போயிருக்காது. முகாம்களில் வதைபடவும் வேண்டி இருந்திருக்காதே. //

    சயந்தன் இதற்கும் பதில் சொல்லியிருக்கலாமே?? அல்லது செத்த பின்பு சொல்லலாமென விட்டு விட்டீர்களா??

  9. Birundan on June 9th, 2009 at 12:36 pm

    சயந்தன் on May 29th, 2009 at 7:36 am
    இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?//

    நான் செத்த பிறகு!

    ஒட்டுமொத்த தமிழரின் மன்நிலை

  10. சயன் on June 12th, 2009 at 10:50 am

    //போர் நடக்கும் போது புலிகள் மட்டும் பின் வாங்க வேண்டியது தானே? எதற்கு பொதுமக்களையும் இழுத்து சென்றனர்? அவர்களை ஊரிலேயே விட்டுச் சென்றிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும் போயிருக்காது. முகாம்களில் வதைபடவும் வேண்டி இருந்திருக்காதே. //

    கடைசி நேர உயிரிழப்புகளுக்கு விடுதலை புலிகளும் கரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    உண்மை நிலவரம் வன்னி மக்களுக்கே தெரியும். அண்மையில் வவுனியா IDP முகாமில் கடமையாற்றி வந்த நண்பரின் கூற்றுபடி மக்கள் விடுதலை புலிகளின் மேல் கடும் கோபத்திலுள்ளனர். இது கடைசி வரை அவர்களை வெளியேறேவிடாததற்கு மட்டுமல்ல, கடந்த வருடங்களில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்புகளுக்காவும் தான். பதினைந்து சிறுமிகள் கைக்குழந்தையுடன் நடமாடுவதை முகாம்களில் காணலாம். இவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்புவதற்காக, திருமண பந்ததில் திணிக்கபட்டவர்கள். கடைசி நேர உயிரிழப்புகளுக்கு விடுதலை புலிகளும் கரணம்,

  11. பார்த்திபன் on June 15th, 2009 at 12:07 am

    //சயந்தன் on May 29th, 2009 at 7:36 am
    இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?

    நான் செத்த பிறகு!

    Birundan on June 9th, 2009 at 12:36 pm
    ஒட்டுமொத்த தமிழரின் மன்நிலை//

    பிருந்தன் உங்களதும், சயந்தனதும் கருத்தும் எப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகும்?? உப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே புலிகள் அழிவிற்கும் வழி வகுத்தீர்கள். இனியும் இப்படி உசுப்பேத்தி மிச்சமீதியிருக்கும் மக்களையும் அழிக்கும் மனோபாவமா??

  12. Anonymous on July 21st, 2009 at 5:25 pm

    Priyanka’s mystery man

  13. அறிவுடைநம்பி on July 29th, 2009 at 9:28 am

    //இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு என எம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பதைத் தவி// உண்மையான வார்த்தைகள். ஒரு சிலவான கோடிஷ்வரர்களுக்காக சொந்த மக்களையே சாகக் கொடுக்கும் தேசம் இந்தியா. ஏன் சுனாமி வந்தபோதே, மக்களை கேவலமாக புழுவிலும் கீழ்தரமாக நடத்தியது இந்திய ஆளும் வர்க்கம். பிணங்களை எல்லாம் நாறடித்து பின்பே தூக்கி மொத்தமாக வீசினார்கள். இதுவே உத்திரபிரதேசமோ, மத்திய பிரதேசமோ எங்காவது வந்திருந்தால், தாங்கு தாங்கு என்று தாங்கியிருப்பார்கள். மும்பையில் டாடா ஹோட்டல் தாக்கப்பட்டதற்கு கொடுத்த முக்கியத்த்துவத்தை இந்திய ஊடகங்களும் சுனாமி மக்களுக்கு கொடுக்கவில்லை. பிணந்தின்னி மனிதர்கள் !!!!!!!!!!. ஆனால் எழுச்சியுறும் மக்கள் இவர்களை அழித்து ஒழிப்பார்கள்.

  14. Tamilan on August 27th, 2009 at 4:37 am

    Indian slum dogs will never understand our pain, because they are typical coolie-minded people.

  15. கிருத்திகன் on October 11th, 2009 at 7:09 pm

    1.புலிகள் துப்பாக்கி முனையில் மக்களைக் கடத்தித் தம்மோடு வைத்திருந்தார்கள்

    2. மக்கள் தாமாக விரும்பியே புலிகளுடன் சென்றார்கள்.

    இந்த இரண்டு கூற்றுகளிலும் ஒரு பத்துப் பத்து சதவீத உண்மையிருந்தாலும், போரியல் தெரிந்த தீவிர மாற்றுக் கருத்தாளர் ஒருவர் சொன்ன ஒரு விஷயம் நம்பக்கூடியதாய் இருந்தது. ///இறுதிப் போர் என்று சொல்லும் இந்த யுத்தத்தில் படையணி நகர்த்தப்பட்ட விதம் (வியூகம்), சொல்லும் செய்தி ஒன்றே, புலிகளும் மக்களும் விரும்பியிருந்தால்கூட, பாதுகாப்பாம பகுதிகளுக்குத் தப்பிச்செல்ல முடியாதபடி திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு யுத்தம் அது///. யுத்தத்தில் படையணி நகர்ந்த விதத்தை யாராவது சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

    ஆக மொத்தத்தில் புலிகள் பின்வாங்கும்போது ஏன் மக்களை இழுத்துச் சென்றார்கள் என்று கேட்டால் ஒரே ஒரு பதில்தான் என்னிடம் இருக்கிறது. அருமையாக விரிக்கப்பட்ட ஒரு பொறியில் அவர்கள் மாட்டியிருந்தார்கள். (யார் யார் சேர்ந்து விரித்தார்கள் என்பது நான் சொல்லமாட்டேன்). புலிகளே முயன்றிருந்தாலும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியிருக்க முடியாது. புலி ஆதரவு- புலி எதிர்ப்பு என்று இரண்டாகப் பிரிந்து மோதும் யாரும், இந்த அப்பட்டமான உண்மையைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

    சயந்தன் இந்தியா மீது வைக்கிற குற்றச்சாட்டுக்கு நீண்டகாலம் பின்னோக்கிப் போய் ஆதாரம் தேடத்தேவையில்லை. 2001 சமாதான காலத்துக்கு முன் நடந்த யுத்தம், யுத்த நிறுத்தம் எல்லாம் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். இதற்குமேல் சொல்ல ஏதுமில்லை… சண்டைபோட்டு அலுத்துவிட்டது எனக்கு…..

    (சயந்தன் கோபத்தை, வலியை நேர்மையான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார், அதற்காக மொத்தமாக இந்தியர்களைக் குறிவைத்து ஆபாசமான வார்த்தைகளில் திட்டாமல், உங்கள் கோபத்தை நல்ல வார்த்தைகளில் வெளிப்படுத்தலாமே)

  16. கிருத்திகன் on October 11th, 2009 at 7:10 pm

    கடைசி வரிகள் பின்னூட்டங்களைப் பற்றியவை… உங்களுக்கானவை இல்லை சயந்தன்

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231