கையறு நிலையுற்ற ஓர் இரவு
சிறிதும் பெரிதுமாய் மண்மூடைகள்
சிதைந்து கிடக்கின்றன.
தெருவெங்கும்
வனமெங்கும்
பதுங்கு குழி வாயில்களிலும்
கடற்கரைக் கொட்டில்களிலும்
சிதறிக் கிடக்கின்றன
அவை.
அடுக்கி வைத்த
மண் மூடைகளின் பின்னே
குறி பார்க்கின்றன
துப்பாக்கிகள்.
முன்னேயும் தான்!
சூடுகளிலும் பொஸ்பரஸ் எரிவுகளிலும்
க்ளஸ்ரர் குண்டுகளிலும்
மண்மூடைகள்
வயிறு பிழந்து விழுகின்றன.
புதிய மண்மூடைகளை அடுக்குகிறார்கள்
யாரோ
உள்ளிருக்கும் மண்
சொரியும் மூடையொன்றில்
கண்களும் கால்களும்
முளைத்ததைக் கண்டேன்.
என் கண்கள் குருடாகின..
0 0 0
நீண்டு
கடலில் இறங்குகிறது
எஞ்சியிருந்த ஒற்றைத் தெரு.
எதிர்த் திசையில்
வரிசையுற்று நிற்கின்றன
மரணங்கள்,
ஒன்றன் பின் ஒன்றாக..
மரணங்கள்
குழந்தைகளை ஏந்தியிருந்தன.
சிறுவர்களை அணைத்திருந்தன.
மரணங்கள் எழுதப்பட்ட தாள்களின்
ஓரத்தில் குத்தப் படுகிறது முத்திரை.
அவலமும் வீரமுமென..
தாள்களும்
மரணத்தின் புகைப் படங்களும்
பட்டங்கள் போலேறி
செயற்கைக் கோளில் புகுந்ததை
பொஸ்பரஸ் வெளிச்சத்தில்
சிறுவர்கள் கண்டார்களாம்.
ஐ நா முற்றத்து
உடைந்த கதிரைக் கால்களுக்கிடையில்
சிக்கிக் கொண்டன பட்டங்கள்.
ஓ என்ற இரைச்சலிட்டு
பிய்த்தும் பிடுங்கியும் எடுக்கின்றனர்
குளிர்ச் சட்டை போட்ட மனிதர்கள்.
ஐநாவின் சுவர்களில்
மோத விடப்படுகிறது
மரணம்.
வெள்ளை மாளிகையின்
வெளிப்புற சுவர்களில்
இரத்தம் பூசப்படுகிறது.
ஏதோ ஒரு நாட்டின்
இந்தியத் தூதரகத்தில்
மரணத்தின் இரைச்சலில்
காதுகளை இறுக மூடிக் கொள்கிறார்கள்.
மரணங்கள் ஆயுதங்களாகின.
மரணங்கள் போராடுகின்றன.
மீளவும் மரணிக்கிறது
மரணம்.
கையிலிருந்த பதாகையில்
குருதி வழிந்தோடும்
என் பிறக்காத பிள்ளையின் விழிகளைக் கண்டேன்.
என்னை ஏன் கொன்றீர்கள்?
We want freedom என்ற பேரிரைச்சலில்
அடங்கிப் போனது
குழந்தையின் கேள்வி!
யாருக்கு என்ற அதனது கேள்வி
இம்முறை
எழவேயில்லை!
06.03.09
பின்னிரவு




















Leave a Reply