அக முகம்-அதிகம் பிடிச்சது..


1
‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான்.

பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.

‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’ என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.

அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.

இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..

‘யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ’

‘நிகழ்ச்சி முடிய போய் பேசிப் பாக்கலாம். ஏதாவது கவிதையைப் பற்றித்தான் பேச வேணும். அவளுக்கும் கவிதை எழுத தெரிஞ்சால் எவ்வளவு நல்லது? ‘

‘எப்பிடியிருந்தது நிகழ்ச்சி.. நல்லாயிருந்ததோ’

‘ம்.. உங்கடை கவிதையள் நல்லாயிருந்தது.’

‘எங்கை படிக்கிறியள்’

‘…இஞ்சை தொகுப்புரை தர உம்மை கூப்பிட்டாச்சு போம்..’ பக்கத்திலிருந்தவன் தட்ட வேட்டியைச் சரி செய்து கொண்டு எழுந்தான். வியர்த்தது.

‘விசரர்.. ஒரு ஏ சி ஹோலை புக் பண்ணியிருக்கலாம்..’

குரல் செருமினான். அவள் இவனையே பார்த்தபடி.

‘அப்பொழுது சொன்னதையே இப்பொழுதும் சொல்கிறேன். நாம் ஆண்ட பரம்பரை. மீளவும் ஆளுவோம். அதை யார் தடுத்தாலும் எதிர்த்து போராடுவோம். ‘

2
காடு அமைதியாயிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த அமைதி கலையும்.

அவர்கள் அவசர கதியில் பங்கர்களுக்குள் நிறைந்த நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.

‘எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது..’ யாரோ ஒருவன் பாடினான்.

‘ச்சூய்… காட்டுக்குள்ளை கழுதை வரப்போது. பாட்டை நிப்பாட்டு.’ அது அவன் தான். எப்போதும் போலில்லாமல் இன்று அதிகமாய் பேசியும் சிரித்தும் கொண்டிருந்தான்.

பாடியவன் நிறுத்த ‘சரி சரி பாடு நான் பகிடிக்கு சொன்னன்.. நல்லாத்தான் இருக்கு’ என்றான்.

அவன் பாடவில்லை. எல்லோரும் அமைதியானார்கள்.

‘இன்னுமென்னடா ஒரு ஐஞ்சு மணித்தியாலம். பிறகு எல்லாம் சரி.. பிறகு இங்காலைப் பக்கம் அவன் வந்து பாக்க மாட்டான்.’

மீண்டும் அவனைத் தவிர எல்லோரும் அமைதியாயிருந்தார்கள்.

‘பாட மாட்டியோ.. சரி போ நான் பாடுறன்..’ அவன் பங்கருக்குள் இறங்கி சேற்று நீரை வெளியிறைத்தான்.

‘எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது’

3
பஸ் சிரிப்புக்களால் நிறைந்தது.

‘பிறகெங்கையடா அவள்’

‘காணேல்லை. தேடினன் போயிட்டாள் போல’

‘சரி விடு.. எப்பிடி எங்கடை விசிலடி’

‘கலக்கிட்டியள்.. ‘

‘எங்கை வேட்டி..’

‘அது சும்மா.. உள்ளை ஜீன்ஸ் போட்டிருந்தன். நிகழ்ச்சி முடிய வேட்டியை கழட்டி எறிஞ்சிட்டன். அதை மனிசன் கட்டுவானே.. சும்மா ஒரு பிலிம் காட்டவெல்லோ அது கட்டினது. எப்பிடி என்ரை கவிதையள்’

‘அந்த மாதிரி.. நல்லா உணர்வு பூர்வமா இருந்திச்சு.. கேட்கறவனுக்கு கட்டாயம் ஒரு பீலிங் வந்திருக்கும்.’

உள்ளுக்குள் பெருமையாயிருந்தது.

‘ம்.. சரி நாளைக்கு படம் பாக்கப் போவமே? ‘

‘புதுசா தமிழ்ப் படம் ஒண்டும் வரேல்லையே’

‘தமிழ்ப்படத்துக்கு ஆர் போறது. இங்கிலிஷ் படத்துக்கு போவம்.’

4
எல்லோருக்கும் உடம்பு வலித்திருந்தது. அருகருகாக அமர்ந்திருந்தார்கள்.

பருத்தித்துறை வடையும் வெறுந்தேத்தண்ணியும் நன்றாகவிருந்தன.

‘வேறை என்னடாப்பா.. ஏதாவது கதையுங்கோவன்.’

இன்னும் சில நிமிட நேரங்கள் இருந்தன. அதன் பின்பு இந்தக் காடு அதிரும்.

அவன் அருகிலிருந்தவனின் முதுகில் சாய்ந்தான். அருகிலிருந்தவன் கண்கள் பனித்ததை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்.

வோக்கி இரைந்தது… ‘ரூ..ரூ.. கந்தயா.. ரூ..ரூ கந்தையா..என்னெண்டு சொன்னால்.. .

அவன் எழுந்தான். இடுப்பில் தோளில் என எல்லாவற்றையும் பொருத்தினான். எல்லோருக்கும் கை கொடுத்தான். இருட்டுக்குள் நுழைந்து திரும்பி கையசைத்து திரும்பி நடந்தான்.

நிமிடங்கள் கரைந்தன. காடு வெடியோசையூடு அதிர துரத்தே செந்நிற பிழம்பெழுந்தது. தொடர்ந்து சடசடத்தன. நடு இரவு தாண்டி விட்டது. இனி விடியும்.

5
வெளியே மழை வரும் போல இருந்தது. கட்டிலிலி கால் நீட்டிப் படுத்தான் அவன்.

அன்றைய பத்திரிகை பார்வையில் இருந்தது.

கவிதைப் போட்டி..

எழுந்து உட்கார்ந்தான். இன்றைய சமகால நிலையை பிரதிபலிப்பதாய் நூறு சொற்களுக்கு கூடாமலும் ஐம்பது சொற்களுக்க குறையாமலும் கவிதைகளை அனுப்புங்கள். பரிசு முதல்ப்பரிசு 5000….

பேப்பரும் பேனையும் எடுத்தான்.

‘விழ விழ எண்டு தொடங்கினால்.. எழு எழு எண்டு அடுத்த வரி போடலாம்.. அழ அழ எண்டு ஏதாவது எழுதி அடுத்த வரியை நிரப்பலாம்.. பிறகு… ம்…. வழ வழ எண்டு ஏதாவது எழுதலாமா’ என்று யோசிக்க தொடங்கினான். வெளியே இருட்டிக் கொண்டு வந்தது.

This entry was posted on Monday, January 30th, 2006 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

One Response to “அக முகம்-அதிகம் பிடிச்சது..”

  1. Anonymous on January 30th, 2006 at 1:53 pm

    என்னப்பன்,
    பழசுகள தோண்டி எடுக்கிறீர் போல?

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231